செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத் துறை!

minnambalam -  Kavi  : செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத் துறை!
புழல் சிறையில் இருந்து அமலாக்கத் துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கடந்த ஜுன் 14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவரை  காவலில் எடுக்க நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் இன்று உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு விசாரணை நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இதை விசாரித்த நீதிபதி அல்லி உச்ச நீதிமன்ற அனுமதிப்படி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கினார்.

இந்த விசாரணையின் போது தாடியுடன் செந்தில் பாலாஜி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு தனக்கு காலில் வலி இருந்து வருவதாக செந்தில் பாலாஜி நீதிபதியுடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் கூறும்படி  தெரிவித்த நீதிபதி அல்லி விசாரணையை ஒத்தி வைத்தார்.

உச்ச நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு சென்றனர்.

அங்கு சிறை நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பின், இன்று இரவு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் காரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது நீலநிற சட்டை மற்றும் தாடியுடன் காணப்பட்டார் செந்தில் பாலாஜி.

பிரியா

கருத்துகள் இல்லை: