செவ்வாய், 2 மே, 2023

வரம்பு மீறி பேசும் அநாகரிக அண்ணாமலை.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு” : சீறும் பத்திரிகையாளர் சங்கம்!

 Kalaignar Seithigal - Prem Kumar  : தமிழ்நாடு அண்ணாமலையின் பேச்சுக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியும்"" - (இப்படி நாம் கூறவில்லை; திருப்பூரில் அவரது கட்சிக்காரர்களே சூட்டியபட்டமிது!) புதிதாக தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழக பா.ஜ.க.வுக்கு வந்ததிலிருந்து, அண்ணாமலை நடத்தி வரும் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, தமிழக அரசையும், கழகத்தையும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவரின் அரசியல் அரை வேக்காட்டுத் தனத்தால், பா.ஜ.கவினரை வெளியே தலைகாட்ட முடியாது நிலைக்கு தள்ளியிருக்கிறது.



இதனிடையே செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், செய்தியாளர்களை அவதூறாக பேசிவிட்டு அங்கிந்து நழுவி ஓடுவதையே அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவகையில் சமீபத்தில் கூட சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், “100 ரூபாய் தறேன், 200 வாங்கிக்கொள்ளுங்கள்” என கிண்டலடித்து பேசினார்.

இதனால் அதிருப்தி அடைந்த பத்திரியாளர்கள் பலரும் கண்டித்தனர். மேலும், “தமிழகத்தில் ஒட்டுமொத்த பா.ஜ.க-வின் நிகழ்வுகளை புறக்கணிக்க முயற்சி மேற்கொள்ளும்” என தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்தும் அண்ணாமலை தனது போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தி.மு.க குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டுவிட்டு கேள்வி கேட்கும் முன்பு ஓடிய அண்ணாமலையை சுற்றி வளைத்த பத்திரிக்கையாளர்கள், தி.மு.க தலைவர்கள் மீது அண்ணாமலை சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளிக்கமுடியாமல் அண்ணாமலை, வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுங்க, சாப்பிடற சாப்பாடு அப்பதான் ஒட்டும், செய்தியை போடச் சொல்லி கெஞ்சவில்லை” என வசைபாடியுள்ளார். மேலும் நீங்கள் ஜட்ஜ் கிடையாது. இரு மெசெஞர். என்னோட நீயூஸ் போடலாமா வேண்டாமா என்பது குறித்து உங்க எடிட்டர் முடிவு செய்வார் என பேசியுள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் அண்ணாமலைக்குக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் ( 30-04-2023) ஞாயிறன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை. இந்த செய்தியாளர் சந்திப்பில், தி.மு.க தலைவர்கள் மீது அண்ணாமலை சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது 2010 கோடி ரூபாய் என்ற தொகையை சுட்டிக்காட்டியது எந்த அடிப்படையிலானது ? என்ற கேள்வியைக் கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு நியாயமான பதில் சொல்லியிருக்கலாம் அல்லது கேள்வியை தவிர்த்து இருக்கலாம். ஆனால் அதிகாரத் திமிரில் அன்னாமலை சொன்ன வார்த்தைகள், “வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுங்க, சாப்பிடற சாப்பாடு அப்பதான் ஒட்டும், செய்தியை போடச் சொல்லி கெஞ்சவில்லை” இப்படி ஆத்திரத்தில் அண்ணாமலை உதிர்த்த வார்த்தைகள் பத்திரிகையாளர்களை சிறுமைப் படுத்தும் கேவலமான நோக்கம் கொண்டவை.

எங்கிருந்து வரும் இந்த திமிரான வார்த்தைகள் ?! வானாளவிய அதிகாரத் திமிரில் வலம் வந்த பலர் இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். படித்த படிப்பிற்கு கூட நாகரீகமும் மரியாதையையும் மனித பண்பையும் அண்ணாமலையிடம் எதிர்பார்ப்பதும் நம்முடைய தவறு தான்.

இன்று மே தினம் உழைப்பாளர் தினம் ஊடகவியலாளர்கள் பா.ஜ.க அண்ணாமலை அவமானப்படுத்துவதை கண்டுகொள்ள விரும்பாத ஆசிரியர்கள் ஊடக முதலாளிகள் வெட்கம் கெட்டவர்களாகி விட்டார்களோ என்ற கோபம் வருகிறது. நம்முடைய சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. பத்திரிகையாளர்களை தொடர்ந்து அவமானப்படுத்தும் அண்ணாமலை உள்ளிட்ட அத்தனைப் பேரையும் கண்டிப்போம். எதிர்த்து சூடு சொரனையயுடன் போராடுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: