திங்கள், 12 டிசம்பர், 2022

ராஜேந்திர பாலாஜியுடன் சமரசம்: வழக்குகள் வாபஸ்!

minnambalam.com  -Kavi  :   ராஜேந்திர பாலாஜியுடன் சமரசம்: வழக்குகள் வாபஸ்!
முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் இன்று (டிசம்பர் 12) வாபஸ் பெறப்பட்டன.
அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்களின் பால் தரம் குறைந்துள்ளது என்றும்,
இது குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஹட்சன் அக்ரோ, விஜய் டைரிஸ், டோட்லோ உள்ளிட்ட நிறுவனங்கள் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதித்தது.

இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி உடனான பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட்டு விட்டதால் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

பிரியா

கருத்துகள் இல்லை: