புதன், 14 டிசம்பர், 2022

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, வரதட்சணை கேட்டதால் மணமகள் தற்கொலை .. தெலுங்கானா

“விடிஞ்சா கல்யாணம்..” மாப்பிள்ளை செய்த கொடுமை  -மணமகள் எடுத்த விபரீத முடிவு:துக்க வீடாக மாறிய திருமண வீடு

  Kalaignar Seithigal  -  KL Reshma  :  இந்தியா  தெலுங்கானா திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, வரதட்சணை கேட்டு மன ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த மணமகனால், மணமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நவிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவளி (22) என்ற இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.


அந்த வகையில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.
திருமணத்திற்கு முந்தைய நாள் (நேற்றைய முன்தினம்) மெகந்தி விழாவில் மணமகளின் தோழிகள் மகிழ்ச்சியாக நடனமாடவே, இவரும் சேர்ந்து நடமாடி மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.
மேலும் மணமகளும், மணமகனும் சந்தோஷமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் மறுநாள் (நேற்று) காலை மணப்பெண் அலங்காரம் செய்வதற்காக அவரது அறை கதவை தட்டியுள்ளனர்.

நீண்ட நேரம் திறக்காத நிலையில் பயந்துபோன உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கே ரவளி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட பெண்ணின் உறவினர்கள் பதறியடித்து உடனே காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், ரவளி இரவு நேரம் அதுவும் மணி கணக்காக மாப்பிள்ளையிடம் போனில் பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், மாப்பிள்ளை சந்தோஷ் ரவளிக்கு வரதட்சணை கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் நன்றாக படித்து சம்பாதித்து வந்த ரவளி திருமணத்திற்கு பிறகு நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் எனவும், அவ்வாறு கிடைக்கும் பணத்தை தன்னிடம் தான் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருமணம் முடிந்த கையோடு பெற்றோரிடம் இருந்து சொத்துக்களை பிரித்துவிட வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு அனைத்து விருந்தாளிகளும் வந்த பிறகு திருமணம் நின்று விட்டால், பெற்றோருக்கு அவமானம் ஏற்படும் என்று எண்ணிய ரவளி திகைத்து நின்றுள்ளார். இதனால் மணமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணமகன் சந்தோஷ் மீது ரவளியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, வரதட்சணை கேட்டு மன ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த மணமகனால், மணமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: