ஞாயிறு, 9 அக்டோபர், 2022

ஆ.ராசா பேச்சு எதிரொலி! வர்ணம், சாதி தேவையில்லை- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

மின்னம்பலம் : சனாதனம் பற்றி கடந்த செப்டம்பர் மாதம் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி பேசிய பேச்சு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் தாண்டி இந்திய அளவிலும் ராசாவின் உரைகள் அதிர்வை ஏற்படுத்தின.
இந்த நிலையில், ‘வர்ணம் மற்றும் சாதி ஆகியவற்றை நாம் முற்றிலும் நிராகரிக்க வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசி  கவனிக்க வைத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நேற்று (அக்டோபர் 7) புத்தக வெளியீட்டு விழா நடந்தது.  டாக்டர் மதன் குல்கர்னி மற்றும் டாக்டர் ரேணுகா போகரே எழுதிய  ‘வஜ்ரசூசி துங்க்’ என்ற அந்த புத்தக வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் பேசினார்.
”சமூக சமத்துவம் என்பது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.  ஆனால் அது மறக்கப்பட்டதால்   மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்தது. வர்ணம் மற்றும் சாதி அமைப்புகள் அடிப்படையில் தீண்டாமையை வலியுறுத்தவில்லை.இன்று யாராவது இந்த நிறுவனங்களைப் பற்றி கேட்டால், ‘அது நடந்து முடிந்துவிட்டது.  அதை மறந்துவிடுவோம்’ என்பதுதான் நமது பதிலாக இருக்க வேண்டும்.

பாகுபாட்டை ஏற்படுத்தும் அனைத்து அம்சங்களையும் நாம் வெளியேற்ற வேண்டும். முந்தைய தலைமுறையினர் உலகத்தின் எல்லா பகுதிகளிலும்  தவறு செய்தார்கள், இந்தியாவும் அதற்கு  விதிவிலக்கல்ல.

அந்த தவறுகளை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது. நம் முன்னோர்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் தாழ்ந்தவர்களாகிவிடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது நடக்காது.

ஏனென்றால் அனைவரின் முன்னோர்களும் தவறு செய்தார்கள். எனவே  `வர்ணா’, `ஜாதி’ போன்ற கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
varna jaati completely discarded mohan bhagwat RSS A Raja

ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிராக இங்கே பாஜகவினர் கொந்தளித்தபோது, ‘இந்து மதத்தில் சாதாரண இந்து, சனாதன இந்து என்று இரு வகை இந்துக்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட ராசா, சனாதன இந்துக்களுக்கு மட்டுமே பாஜக ஆதரவாக இருக்கும் என்றும் சாதாரண இந்துக்களுக்கு திமுகவே ஆதரவாக நிற்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த கருத்து  அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்று, ’சாதாரண இந்து சனாதன இந்து என்ற முழக்கம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரை எடுத்துச் செல்லப்பட்டது.

தற்போது காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே  அண்மையில் ஆ.ராசா பேசிய பேச்சு குறித்து சோனியாவிடம் கூறியுள்ளார். அதை கேட்டு வியந்த சோனியா ராசாவின் முழு உரையையும் கேட்டார் என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தமிழகத்தில் ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு இன்று ஆர்.எஸ்.எஸ், தலைமையே பதிலளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ‘முன்னோர்கள் செய்த குற்றம் முன்னோர்களோடு போகட்டும்.

இப்போது வர்ணம், சாதிகள் தேவையில்லை’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

–வேந்தன்

கருத்துகள் இல்லை: