ஞாயிறு, 9 அக்டோபர், 2022

‘வந்தே பாரத்’ ரயிலுக்கு வந்த சோதனை... எருமை, பசு, இன்று சக்கரம்..

dinamani.com  - vandhe  :  எருமை, பசு, இன்று சக்கரம்.. ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு வந்த சோதனை
லக்னௌ: வந்தே பாரத் ரயில் மூன்றாவது நாளாக இன்றும் செய்தியில் இடம்பெற்றுவிட்டது. புது தில்லி - வாராணசி இடையே இன்று காலை இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயிலின் சக்கரம் 'ஜாம்' ஆனதால், பயணிகள் வேறு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நல்லவேளையாக, பணியிலிருந்த ஊழியர் சக்கரம் ஜாம் ஆகியிருப்பதைக் கவனித்ததால், பாதி வழியில் ரயில் இயக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. ஒரு வேளை சக்கரங்கள் ஜாம் ஆகியிருப்பது கவனிக்கப்படாமல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டிருந்தால் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குஜராத்தில் வெள்ளிக்கிழமை பசு மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலின் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியது. ஏற்கெனவே வியாழக்கிழமை எருமைக் கூட்டம் மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் என்ஜினின் கூம்பு வடிவ முகப்புப் பகுதி சேதமடைந்தது.
தொடா்ந்து 3-ஆவது நாளாக இன்றும் வந்தே பாரத் ரயிலில் ஏறிய பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

புது தில்லியிலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைர் ரயில் நிலையத்தில் இன்று காலை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது. பிறகு, பிற்பகலில் அதிலிருந்த பயணிகள் சதாப்தி ரயிலில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம்
மணிக்கு 160 கி.மீ. வரையிலான வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை மும்பை- காந்திநகா் இடையே அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா்.

முதல் சம்பவமாக அகமதாபாத் அருகே வியாழக்கிழமை தண்டவாளத்தில் நின்றிருந்த எருமைக் கூட்டம் மீது இந்த ரயில் மோதி இருந்தது. இதில் 4 எருமைகள் உயிரிழந்தன. ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. எனினும், ரயிலின் முக்கிய பாகங்களில் எந்த சேதமும் ஏற்படாததால் ரயில் தொடா்ந்து இயக்கப்பட்டது. பின்னா், மும்பை வந்ததடைந்ததும் ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதி உடனடியாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாவது சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.
இரண்டாம் சம்பவமாக, குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதி அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது ஒரு பசு மீது மோதியது. இதில் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியதாகவும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மேற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அதிகாரி சுமித் தாக்குா் தெரிவித்திருந்தார்..

‘உறுதியான வடிவமைப்பு’:
ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘கால்நடைகள் மீது ரயில் மோதும் சம்பவங்கள் தவிா்க்க முடியாதது. விபத்துகளின்போது எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வந்தே பாரத் ரயில் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் கூம்பு வடிவ முகப்பு பகுதி முழுமையாக மாற்றக் கூடியதாகும். அடுத்தகட்டமாக மேம்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 200 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும்’ என்றாா்.

கருத்துகள் இல்லை: