திங்கள், 10 அக்டோபர், 2022

அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்... கண்கலங்கிய கனிமொழி!...

 தினமணி : பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல் ஆழிப்பேரலையாக எழுந்து நின்றவர் ஸ்டாலின் என்றும்,  அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன் என்று திமுக பொதுக்குழுவில் கண்கலங்கி பேசினார் கனிமொழி.   tamil.oneindia.com   - Shyamsundar :  சென்னை: திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்பி அறிவிக்கப்பட்டதும் இன்று திமுக பொதுக்கூட்டத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்.பியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.
ஆக்டிவ் அரசியலில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி இருக்கிறார். அவர் திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார்.


இந்த நிலையில் அவரின் விலகல் காரணமாக வெற்றிடம் ஏற்பட்ட நிலையில், திமுக எம்பி கனிமொழி இந்த பதவிக்கு தற்போது வந்துள்ளார்.
கனிமொழி
திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டது மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. திமுகவில் மிக முக்கியமான தலைவராக கனிமொழி இருந்து வந்தும் கூட அவருக்கு இந்த உயரிய பதவி கிடைக்க மிக நீண்ட காலம் ஆகி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். கனிமொழிக்கு கட்சி ரீதியாக உயரிய பதவி வேண்டும், மகளிரணி செயலாளர் பதவியை தாண்டிய பெரிய பதவி வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில்தான் கனிமொழி இன்று துணை பொதுச்செயலாளர் ஆக்கி உள்ளார். கட்சி நிர்வாகம், அனுபவம் என்று பல வகைகளில் இது முக்கியமான தேர்வாகி பார்க்கப்படுகிறது.

ஏன் முக்கியம்?
இந்த பதவி கனிமொழிக்கு தரப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், முகம் முழுக்க மகிழ்ச்சியோடு கனிமொழி மேடைக்கு வந்தார். அவர் கண்கள் முழுக்க சந்தோஷம் நிரம்பி இருந்தது. கிட்டத்தட்ட பல யுகங்களாக இது போன்ற பெரிய அங்கீகாரத்திற்கு அவரின் ஆதரவாளர்களும் காத்து இருந்தனர் . இதனால் அவர்களும் கனிமொழி வாழ்க, வாழ்க என்று கூறி கோஷம் எழுப்பினர். பெண் நிர்வாகிகள் பலர் கனிமொழி மேடை ஏறும் போது அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

வணக்கம்
அதோடு கனிமொழி மேடை ஏறும் வரை வரிசையாக வழியில் இருந்தவர்களிடம் எல்லாம் வணக்கம் வைத்தார். சிலரிடம் மட்டும் கனிமொழி கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது சட்டென வழியில் இருந்த நபர் ஒருவரின் காலில் விழுந்தார். மற்றவர்கள் எல்லோருக்கும் வணக்கம் வைத்த கனிமொழி அந்த நபரின் காலில் மட்டும் திடீரென விழுந்தது கவனம் பெற்றது. இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது.

காலில் விழுந்தார்
காலில் விழுந்த கனிமொழிக்கு தலையில் கை வைத்து அந்த நபர் வாழ்த்து தெரிவித்தார். நீல சட்டை அணிந்து இருந்த அவர் யார் என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம். செல்வியின் கணவர் ஆவார். இதன் காரணமாகவே கனிமொழி அவரின் காலில் விழுந்து வணங்கி உள்ளார். இந்த நிகழ்வின் போது செல்வம் முன்வரிசையில் அமர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்
அதன்பின் கனிமொழி மேடைக்கு ஏறினார். அங்கு இருந்த தலைவர்களிடம் வணக்கம் சொன்னார். துரைமுருகன் காலை தொட்டு வணங்கினார். பின்னர் ஸ்டாலின் காலையும் தொட கனிமொழி முயன்றார். ஆனால் கனிமொழியிடம் அதெல்லாம் வேண்டாம் என்று ஸ்டாலின் கை காட்டினார். அதோடு அங்கே இருக்கும் படங்களுக்கு மாலை போடுங்கள் என்பது போல கையால் சைகை காட்டினார். இதையடுத்து அங்கு இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களுக்கு கனிமொழி மரியாதை செய்தார்.

கருத்துகள் இல்லை: