வியாழன், 13 அக்டோபர், 2022

சென்னை மெட்ரோவில் 100 ரூபாயில் ஒரு நாள் பாஸ்

மாலை மலர்  :  சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு 42 ரெயில்கள் தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும், மற்ற சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகிறது.
பொதுவாக அலுவலக நேரங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களில் 30 சதவீதம் பேர் செல்போன் உதவியுடன் 'கியூ-ஆர் கோடு' முறையிலும், 70 சதவீதம் பேர் பயண அட்டையும், சிலர் டோக்கன் முறைகளையும் பெற்று பயணம் செய்கின்றனர். இதற்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ரூ.100 கட்டணத்தில் வழங்கப்படும் தினசரி பாஸ்க்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் தினசரி பாஸ் என்ற திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளது. பயணத்தை தொடங்கும் எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலும் ரூ.100 பயண கட்டணமும், பயண அட்டைக்கு ரூ.50 செலுத்தி இந்த தினசரி பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் சென்று வரலாம். கடைசி பயணத்தை முடிக்கும் ரெயில் நிலைய கவுண்டரில் பயண அட்டையை திருப்பி கொடுத்து ரூ.50-யை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த தினசரி பாஸ்-ஐ யார் வாங்கினார்களோ? அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாநகர பஸ்களில் தினசரி பாஸ்-ஐ வாங்கியவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும். மற்ற எவரும் பயன்படுத்த முடியாது. ஆனால் மெட்ரோ ரெயிலில் அப்படி இல்லை. இதேபோல், 1 மாதம் விரும்பியபடி பயணம் செய்ய ரூ.2 ஆயிரத்து 500 செலுத்தி மாதாந்திர பாஸ் பெற்றுக்கொள்ளலாம். அதனுடன் பயண அட்டைக்கான கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். இது திருப்பி வழங்கப்படும்.

மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கொரியர் நிறுவனத்தினர் இடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் இந்த திட்டத்தை அதிகம் ஊக்குவித்து வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை: