ஞாயிறு, 9 அக்டோபர், 2022

திமுக மகளிரணி மாநில செயலாளர் ரேஸில் 3 பேர்.. கனிமொழி துணைபோது செயலாளர் ஆவதால் ...

ரேஸில் 3 பேர் - ஹெலன் டேவிட்சன்
முன்னாள் அமைச்சர் தமிழரசி
மீண்டும் அமைச்சரானார் பூங்கோதை-ஐடி துறை ஒதுக்கீடு | Poongothai swear in as  IT Minister, மீண்டும் அமைச்சரானார் பூங்கோதை-ஐடி துறை ஒதுக்கீடு - Tamil  Oneindia

tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை : திமுக துணை பொதுச் செயலாளர் பதவி கனிமொழி எம்.பிக்கு வழங்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மகளிர் அணி செயலாளர் பதவிக்கான ரேஸ் சூடுபிடித்துள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவியை திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில், கனிமொழி வகித்து வரும் மகளிரணி மாநில செயலாளர் பதவியில் அடுத்து யார் வருவார் என்பது தொடர்பான பேச்சுகளும் எழுந்துள்ளன. 3 பேரின் பெயர்கள் இந்த ரேஸில் அடிபடுகின்றன.
திமுக புதிய நிர்வாகிகள்
திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 

கிளை, ஒன்றிய, பேரூர், நகர, வட்ட, மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 72 கழக மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைவர், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க திமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இரண்டாவது முறையாக முக ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழுவில் வெளியிடப்படும்.

துணை பொதுச் செயலாளர்
இந்நிலையில், திமுகவின் 5 துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கான மகளிர் பிரதிநிதித்துவ அடிப்படையில், திமுக மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி நியமனம் செய்யப்பட உள்ளார் எனத் தகவல்கள் வருகின்றன. இதற்கான அறிவிப்பும் நாளை வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஸ்டாலினின் சாய்ஸ்
அடுத்த துணைப் பொதுச் செயலாளர் யார் என்ற ரேஸில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி, பூங்கோதை ஆலடி அருணா, டாக்டர் கனிமொழி சோமு, கீதா ஜீவன், புதுக்கோடை விஜயா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. தற்போது திமுக மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழிதான் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட இருக்கிறார் என திமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. திமுகவின் மகளிர் அணி செயலாளராக உள்ள கனிமொழி, புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை மகளிர் அணி பொறுப்பையும் கவனிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மகளிரணி செயலாளர் யார்?
கனிமொழி துணைப் பொதுச் செயலாளர் ஆகவிருப்பதால், மகளிரணி செயலாளராக அடுத்து யாரை நியமிப்பது என கனிமொழியிடமே திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் ஒரிரு பெயர்களை பரிந்துரை செய்துள்ளாராம். திமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டாலும், மகளிர் அணியை மேற்பார்வை செய்யும் பொறுப்பும் கனிமொழிக்கே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

ரேஸில் 3 பேர் - ஹெலன் டேவிட்சன்
திமுக மகளிர் அணி செயலாளராக வர வாய்ப்பிருப்பவர்கள் என முக்கியமாக 3 பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. கன்னியாகுமரி முன்னாள் எம்.பியான ஹெலன் டேவிட்சன் இந்த பட்டியலில் முன்னணியில் இருக்கிறார். மாநில மகளிர் தொண்டரணி செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஹெலன் டேவிட்சன் கனிமொழியின் நம்பிக்கைக்குரியவர் என்ற வகையில் அவரால் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழச்சி தங்கபாண்டியன்
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியன் பெயரும் இந்த ரேஸில் அடிபடுகிறது. கவிஞர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட அரசியல்வாதியான தமிழச்சி, அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி ஆவார். இவர் பெயரும் ஸ்டாலினின் சாய்ஸில் இருந்தாலும், கனிமொழியின் விருப்பத்தில் இவர் இல்லை என்று கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் தமிழரசி
முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்.எல்.ஏவுமான தமிழரசி ரவிக்குமார் தற்போது மாநில மகளிர் அணி துணை செயலாளராக இருக்கிறார். இவரும் மகளிரணி மாநில செயலாளருக்கான ரேஸில் இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. 2006-2011 கருணாநிதி ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தமிழரசி. இவருக்கு தற்போது அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில், மகளிர் அணி செயலாளர் ஆக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கனிமொழி கையில்
இவர்கள் 3 பேரின் பெயர்களும் முக்கியமாக அடிபட்டாலும், மகளிர் அணியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் சிம்லா முத்துச்சோழன் உள்ளிட்ட பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், கனிமொழியின் பரிந்துரையையே இந்த விஷயத்தில் ஸ்டாலின் ஏற்பார் எனத் தெரிகிறது. காரணம், திமுகவில் மகளிர் அணி புத்துயிர் பெற்றதே கனிமொழியின் நியமனத்திற்குப் பின்னர் தான். இதனால், அவரே மகளிர் அணிக்கான அடுத்த தலைமையை தேர்ந்தெடுப்பார் என்கிறது அறிவாலய வட்டாரம்.

கருத்துகள் இல்லை: