வியாழன், 13 அக்டோபர், 2022

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை

தினமலர் :பத்தினம்திட்டா: கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
கேரள சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த பத்மா, கலடி பகுதிகளைச் சோ்ந்த ரோஸிலின் ஆகியோர் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகார்கள் மீது போலீசரார் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.
செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது ஷபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த பகவல் சிங் - லைலா தம்பதி, அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.
விசாரணை:
இந்நிலையில், சபி மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதால், வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பத்மாவும், ரோஸிலினும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரின் நிலை இதுவரை மர்மமாகவே இருக்கிறது.

நாடு முழுவதும் நரபலி விவகாரத்தை கவனித்து வரும் நிலையில், மேலும் 12 பெண்கள் குறித்த மர்மம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: