புதன், 26 அக்டோபர், 2022

காந்தியின் ஹரிஜன் லேபிள் . ஆளுநர் ரவியும் அந்த கால இலங்கையும்

ராதா மனோகர் :  ஆளுநர் ஆர் என் ரவி , பட்டியல் இனமக்களை குறிக்கையில் ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். இக்குற்றத்திற்கு  வன்கொடுமை தடை சட்டத்தில் தண்டிக்க வழி உண்டா என்று தெரியவில்லை  தெரிந்தால் கூறுங்கள்!
மேலும் மோகன் கரம்சந்த்  காந்தியின் ஹரிஜன் என்ற லேபிள் மாற்றம் தொடர்பான ஒரு இலங்கை வரலாற்று செய்தி முன்பு பதிவிட்டிருந்தேன்   அந்த செய்தியும் முக்கியமானதுதான் :
இதோ அதன் மீள்பதிவு :    இலங்கையில் ஹரிஜன் என்ற சொல் எந்த காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை.
இந்த சொல்லே பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை .
இந்நிலையில்  தமிழக பார்ப்பனர்கள் எப்படி ஒவ்வொரு பார்ப்பனீய கருத்துக்களாக அங்கு விதைத்தார்கள் என்பதை இந்த 1956 ஆம் ஆண்டு இலங்கை வீரகேசரி பத்திரிகை காட்டுகிறது.
இலங்கை அரசியல் அமைப்பிலோ சட்டத்திலோ ஜாதி இல்லை . நடைமுறையில் ஜாதி பாகுபாடு மட்டுமல்ல குற்றங்களும் இருந்தன தற்போதும் ஓரளவு இருக்கின்றன..
ஆனால் அந்த ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு ஒரு சமூக அங்கீகாரம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த செய்தியும் தலைப்பும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என்றெண்ணுகிறேன்.
கோயில்கள் எல்லா ஜாதியினரும் வழிபடுவதற்காக திறந்து விடப்பட்டன என்றுதான் பிற்கால பத்திரிக்கை செய்திகள் கூறின.
ஆனால் இந்த வீரகேசரி பத்திரிகையோ ஹரிஜனங்கள் என்ற காந்தியின் கபட வார்த்தையை இறக்குமதி செய்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜன் என்ற சொல் மூலம் காந்தி ஏமாற்றினர் என்பது வரலாறு . ஜாதியே அடியோடு ஒழியவேண்டும் என்று பெரியாரும் அம்பேத்காரும் போராடிக்கொண்டு இருந்த காலக்கட்டத்தில் அதற்கு எதிராக நின்று கொண்டு அந்த மக்களை ஏமாற்ற காந்தி கண்டுபிடித்த கயமை சொல்தான் இந்த ஹரிஜன் என்ற சொல்.
அதே பணியில் இதை இலங்கையில் அரங்கேற்றியவர்கள் பார்ப்பன பத்திரிகை ஆசிரியர்கள்.
இவர்களை பற்றிய விபரங்களை நாம் வரலாற்றில் பதிவு செய்யவேண்டும்
தஞ்சை மாவட்டம் திருவையாறு திரு..கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் அய்யங்கார் எனப்படும் கே. பி. ஹரன் என்பவர்தான் அப்போது வீரகேசரி பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.
மேலாண்மை இயக்குனராக இருந்தவர் ஈஸ்வர அய்யர் . நிர்வாகியாக இருந்தவர் சங்கரநாராயணன் என்கின்ற மூன்றாவது பார்ப்பனர்.
இதன் உரிமையாளர் தமிழ்நாடு ஆவணிப்பட்டியை சேர்ந்த பெரி. சுப்பிரமணியம் செட்டியார்.என்பவராகும்
1959 இற்கு பின்பு இதன் ஆசிரியராக இருந்து பார்ப்பன சேவையை அங்கு செய்தவர் இந்து பத்திரிகையின் சமந்தியான   .கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் என்பவராகும் .
அசல் ஆர் எஸ் எஸ் இந்துத்வா அடிப்படை வாதம் தற்போது இலங்கையில் மேலோங்கி இருப்பதற்கு இந்த புண்ணியவான்கள் அளப்பெரும் சேவை ஆற்றி உள்ளார்கள்..
இது ஒரு சிறு குறிப்பு மட்டுமே . இது பற்றி விரிவான ஆய்வு கட்டுரையே எழுதவேண்டும் .

கருத்துகள் இல்லை: