திங்கள், 24 அக்டோபர், 2022

"தமிழ்நாட்டில் புதிதாக 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது" அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு !

kalaignarseithigal.com - KL Reshma  :  தமிழ்நாட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25, நகர்புற சுகாதார நிலையங்கள் 25 என மொத்தம் 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆரம்ப மற்றும் நகர்புற சுகாதார நிலையங்கள் பற்றிய ஒதுக்கீடு விவரங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில்
 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், இன்று சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25, நகர்புற சுகாதார நிலையங்கள் 25 என மொத்தம் 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கு முன் புதிதாக சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு ஆறேழு ஆண்டுகள் ஆகிறது.
எனவே நமது தேவையை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதை உணர்த்தி அனுமதி பெறப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டில் புதிதாக 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது" அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு !

தமிழகத்தை பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,127 சுகாதார நிலையங்கள் உள்ளன. அதேபோல துணை சுகாதார நிலையங்கள் 8, 714 உள்ளன. வட்டார மருத்துவ மனைகள், வட்டம் சாராத மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகள் உள்ளன.

புதிதாக சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்தில் பல பிரதிநிதிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப விதிகளை பின்பற்றி, புதிய ஆரம்ப - நகர்புற சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிவர்த்தி செய்யப்பட உள்ளது.அவற்றில் ஒரு ஆரம்ப - நகர்புற சுகாதார நிலையம் அமைக்க ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் வரை செலவாகும். மேலும் அங்கு பணியாற்றுவோர் சம்பளத்திற்கு ஒரு கோடியே 12 லட்சம் வரை செலவாகும். எனவே இந்த புதிய சுகாதார நிலையங்களை உருவாக்க முதல் ஆண்டு நிதியாக 120 கோடி ரூபாய் செலவாகும். இதில் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதமும், மாநில அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதமும் இருக்கும்.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், உரிய முறையில் ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமான பணிகளை பொதுப்பணித் துறையினர் தொடங்குவார்கள். அந்த பணிகள் நடைபெற்று முடிந்த பின்னர், 2, 127 என்ற எண்ணிக்கையில் உள்ள ஆரம்ப - நகர்புற சுகாதார நிலையங்கள் 2, 177 ஆக உயரும். மருத்துவத் துறையின் கட்டமைப்பை மேலும் மேலும் மேம்படுத்த முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தரமான மருத்துவ சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மானியக் கோரிக்கையின்போது 136 அறிவிப்புகளை வெளியிட்டோம். அதில் கிராமப்புற மருத்துவ கட்டமைப்பை உயர்த்த கிராமப்புற, நகர்புற புதிதாக சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தோம். அவை செயலாக்கம் பெற உள்ளன.

ஓராண்டுக்குள் இவற்றை பயன்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என நம்புகிறோம். கிட்டத்தட்ட 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அவற்றை படிப்படியாக நிறைவேற்றுவோம். குறிப்பாக மலை கிராமங்களில் மருத்துவ சேவை, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கி வருகிறோம். வரும் 30ஆம் தேதி ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக் கிராம பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளோம். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நமது முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தான் மலைவாழ் மக்களின் நலனுக்காக மருத்துவ சேவையை மேம்படுத்தி வருகிறது.
"தமிழ்நாட்டில் புதிதாக 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது" அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு !

முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம், முதல் சேவையில் 93 லட்சத்து 60 ஆயிரம் 434 பேர் வரை பயன் பெற்றுள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பதில் பெருமை அடைகிறோம். விரைவில் அந்த எண்ணிக்கை ஒரு கோடியை தொட உள்ளது. அதேபோல ரிப்பீட் சர்வீஸ் என்ற வகையில் 2 கோடி 3 லட்சத்து 54 ஆயிரம் பேர் வரை இந்த சேவையை பெற்றுள்ளனர். விரைவில் ஒரு கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சரே நேரில் வந்து மருந்து பெட்டகம் வழங்க உள்ளார்.இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் இதுவரை 1,22,172 பேர் பயன் அடைந்துள்ளனர். இதற்காக அரசு சார்பில் 108 கோடியே 96 லட்சத்து 37 ஆயிரத்து 422 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆரம்ப - நகர்புற சுகாதார நிலையங்களுக்கான மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் தேர்வு செய்யப்படுவார்கள்.

தீபாவளியையொட்டி ஏற்படும் தீ விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கவனமுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும். ஆபத்தான வெடிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டி உள்ளவர்கள் மீது எடுக்க வேண்டி நடவடிக்கைகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சட்ட ஆலோசனை பெற்று வருகிறார். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை: