ஞாயிறு, 23 அக்டோபர், 2022

புது மனைவிக்கு நிர்வாண பூஜை.. கட்டாயப்படுத்திய கணவர், மாமியார்..கேரளா .. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி!

Kalaignar Seithigal  - KL Reshma  :  இந்தியா  புது மனைவிக்கு நிர்வாண பூஜை.. கட்டாயப்படுத்திய கணவர், மாமியார்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி!
கேரளாவில் இளம்பெண் ஒருவரை நிர்வாண பூஜை செய்யுமாறு கணவர் மற்றும் மாமியார் கொடுமை செய்ததாக பெண் கொடுத்த புகாரின் மேல் 5 வருடத்திற்கு பிறகு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில், பணத்திற்கு ஆசைப்பட்டு தம்பதியினர் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். அதோடு அந்த சடலத்தை சமைத்தும் சாப்பிட்டனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது கேரளாவில் மீண்டும் ஒரு மாந்திரீக பூஜை சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யபாபு (வயது 36) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூட நம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்டு சத்யபாபு குடும்பத்தினர், திருமணம் முடிந்த 2 மாதத்தில் அவர்களது வீட்டிற்கு சில மந்திரவாதிகளை அழைத்துள்ளனர். அவர்களும் வந்து வீட்டை சோதித்தனர்.

கேரளா நரபலி சம்பவம்
அப்போது சத்யபாபு வீட்டில் தீய சக்தி இருப்பதாகவும், அதனை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் மாமியார் ஷைலஜா (வயது 60) மற்றும் கணவருக்கு நோய் இருப்பதாகவும், அதனை குணப்படுத்த வீட்டிலுள்ள மருமகள் நிர்வாண பூஜை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இவர்களும் அதை நம்பி, அந்த பெண்ணிடம் இதனை கூறியுள்ளனர். மேலும் தங்களுக்கு இருக்கும் நோயை குணப்படுத்த இந்த நிர்வாண பூஜையை செய்யவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் பெண்ணின் ஆடைகளையும் கழட்ட முயன்றனர். இதனால் பதறிப்போன அந்த பெண், இருவரையும் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் தனது குடும்பத்தின் உதவியோடு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தனது கணவருக்கு விவாகரத்து நோட்டீசும் அனுப்பியுள்ளார் இந்த பெண். இருப்பினும் பல ஆண்டுகளாக அந்த பெண் தனது கணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காவல்நிலையத்திற்கும் வீட்டிற்கும் அழைந்து திரிந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தினால், மீண்டும் அந்த பெண் தனது புகார் குறித்து குரலெழுப்பியுள்ளார். இதையடுத்து சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கணவர் சத்யபாபு மற்றும் மாமியார் ஷைலஜா மீது வழக்குப்பதிவு செய்து மாமியாரை கைது செய்துள்ளனர்.

ஆனால் இந்த தகவல் கிடைத்ததையடுத்து கணவர் சத்யபாபு தலைமறைவாகி விட்டதால் அவரை தேடி வரும் நிலையில், இதற்கெல்லாம் காரணமாக கருதப்படும் அப்துல் ஜப்பார் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மீண்டும் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை: