சனி, 27 ஆகஸ்ட், 2022

நடிகர் விஷால் நீதிமன்றத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

hindutamil.in :  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 21.29 கோடி கடன் கேட்டிருந்தார்.
இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது.
இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விஷால் இதையடுத்து, பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை திரையில் வெளியிட முயற்சி செய்தது.
இதையடுத்து தொகையை செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷால் கொடுக்கவேண்டிய தொகையில் 15 கோடியை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் பெயரில் வைப்பீடாக செலுத்தவேண்டும் என்றும், அந்த வைப்புத்தொகைக்கான ரசீதை தலைமை பதிவாளரிடம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என இன்று விஷால் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை என்று நீதிபதி விஷாலிடம் கேள்வி கேட்டபோது லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால்தான் பணத்தை செலுத்தவில்லை எனவும் ஒரே நாளில் ரூ.18 கோடி நஷ்டம்; 6 மாதம் ஆனாலும் திருப்பி செலுத்த முடியாது எனவும் விஷால் தரப்பில் தெரிவித்தார்.
இதற்கு லைகா தரப்பில் தொடர்ந்து படங்களில் நடிக்கும் விஷால் தவறான தகவல்களை தெரிவிக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 9 -ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார் .

கருத்துகள் இல்லை: