செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

திமுக தான் சாதுர்யமான கட்சியா? தலைமை நீதிபதி காட்டம்! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

 மின்னம்பலம் - கலை  : தி.மு.க மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம் என இலவசம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக பேசியிருக்கிறார்.
இலவசங்கள் தொடர்பான வழக்கு!
உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகளும் மனுத்தாக்கல் செய்துள்ளன.  இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி கேள்வி!


அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, இந்த விவகாரத்தில் பொருளாதார நிலை தொடர்பாக முதலில் நாம் விவாதிக்க வேண்டும் என்றார். அதற்கு தலைமை நீதிபதி, தேர்தல் இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று தான்.

பா.ஜ.க, காங்கிரஸ் என அனைத்து கட்சியினரும் இலவசம் வேண்டும் என்ற நிலையிலேயே உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரச்சனை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த விவகாரம் கொள்கை சார்ந்த விவகாரம் அதனால் தலையிட முடியாது என கூற முடியுமா?

உதாரணமாக ஏதாவது சட்டம் இயற்றப்படும்போது அதனை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையா?” என்று கேள்விகளை எழுப்பினார்.

மக்கள் தலையில் விழுகிறது!

தேர்தல் சமயத்தில் இலவச அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ளும். ஆனால் தேர்தல் அல்லாத நேரத்திலும் இலவச அறிவிப்பு என்பதை தான் நாம் முக்கியமான விஷயமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

அதற்கு அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல், இந்த இலவசம் விவகாரத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. குறிப்பாக ஒரு கட்சி சேலை தருவதாக அறிவிக்கிறது,  இலவச மின்சாரம் அறிவிக்கிறது, இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பு  வரி செலுத்தும் மக்களின் தலையில் விழுகிறது. எனவே தான் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

ஊழலுக்கு வழிவகுக்கிறது

“தேர்தல் நேர இலவசம் குறித்து தேர்தல் ஆணையம் கவனித்து கொள்ளும்” என தெரிவித்தால், அது தொடர்பாக சில உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கோரிக்கை விடுத்தார்.

“தேர்தல் அறிக்கையில் கூறப்படும் இலவசங்கள் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கருத்து இருக்க வேண்டும், மேலும் இந்த இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.  இலவச வாக்குறுதிகள் இவ்வாறு தொடர்ந்தால் அது மாநிலத்தின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும், பாதாளத்துக்கு எடுத்து செல்லும், ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மாநிலத்தின் கடன் தொகையே அதிகரிக்கிறது, இது மாநில வளர்ச்சியை பாதிக்கிறது. மேலும் இந்த இலவசங்கள் என்பது ஊழலுக்கு வழி வகுக்கிறது” என்று அவர் வாதிட்டார்.

நலத்திட்டங்கள் மக்கள் பயனடையவே!

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “இந்த விவகாரத்தில் தேர்தல் இலவசம் என்பதை அனைத்து தரப்பும் ஒரு பிரச்சனையாக கருதுகிறீர்கள்? ஆனால் தேர்தல் இலவசத்தை தாண்டி அரசின் கொள்கை முடிவு, திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது.

அதுவும் கவனிக்கப்பட வேண்டியது, சரிபடுத்தப்பட வேண்டியது ஆகும்” என்றார்.  மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்துக்கு  கால்நடை வழங்குவது அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற, அதேபோல கிராமப்புற மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவது அவர்கள் கல்வி கற்று பயனடைய, எனவே இந்த திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என்று கூறவில்லை.

திமுக தான் சாதுர்யமான கட்சியா?

இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்களை நாங்களும் அறிவோம் என்று தலைமை நீதிபதி கூறினார். மேலும் தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சனிடம்,

“இலவசத்திற்கு ஆதரவாக களமிறங்கும் தி.மு.க. மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். எனக்கு இது தொடர்பாக  பல விசயங்கள் கூற வேண்டியுள்ளது. மேலும்,பல விவகாரங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பதால் அது குறித்து அறியாமல் இல்லை என்று நினைக்க வேண்டாம்.

ஆங்கில தொலைக்காட்சியில் தமிழக நிதி அமைச்சர் பேசிய விதம் சரியல்ல” என்று காட்டமாக கூறிய தலைமை நீதிபதி வழக்கு விசாரணை நாளையும் (ஆகஸ்ட் 24) தொடரும் என்று ஒத்தி வைத்தார்.

கலை.ரா

கருத்துகள் இல்லை: