ஞாயிறு, 17 ஜூலை, 2022

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் மட்டுமே இன்றைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியும்

 

 Mahakarunananthesivam Sivakajan : ஜனாதிபதிக்கான போட்டியில் ரணில் விக்கரமசிங்க போட்டியிட்டால் அவரையே ஆதரிப்பேன் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!
நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான போட்டியில் ரணில் விக்கரமசிங்க போட்டியிட்டால் அவரையே தாம் ஆதரிக்க உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பிரபல ஊடகமொன்றிற்கு வழங்கிய செய்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்..
குறித்த விடயம் தொடர்பில் சஜித் பிரேமதாசா என்னுடன் பேசியிருந்தார்.
 அதன்போது அவர் என்னை தனது தந்தையின் நண்பர் என்றும் தனக்கு குறித்த ஜனாதிபதி போட்டியின்போது ஆதரவு தருமாறும் கோரியிருந்தார்.


ஆனால் நான் கருத்தில் எடுப்பதாக தெரிவித்திருந்தபோதிலும் குறித்த போட்டியில் ரணில் விக்கரம சிங்க போட்டியிட்டால் அவரையே நான் ஆதரிக்கவுள்ளேன்.
முன்பதாக 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது பிரபாகரன், ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதியாக வந்தால் தாம் முன்னெடுத்து சென்ற வன்முறைகளை அவர் தடுத்துவிடுவார் என்ற காரணத்தல் அவருக்கு வாக்களிக்கவிடாது என தமிழ் மக்களை தடுத்து மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு ஏதுநிலைகளை உருவாக்கி கொடுத்திருந்தார்.
 இது பிரபாகரன் தனக்கு தானே தலையில் மண்ணை அள்ளிக் கொட்டியதாகவே அமைந்திருந்தது.
அதன்பின் நடந்து முடிந்தவை அனைத்தும் தெரிந்ததே. பிரபாகரன் இறந்த முறை எனக்கும் கவலையளிக்கின்றது. ஆனால் அவர் தனக்கு தானே அதை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
இதேவேளை இன்று பல விடயங்கள் கர்ம வினையின்படியே நடைபெற்றுவருவதாக ஒரு கருத்து உலாவிவருகின்றது.
ஆனால் அதை நான் நம்புவதாக இல்லை.
 ஆனாலும் ரஜீவ்காந்தி இறப்பு மற்றும் கோட்டாபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறியமை போன்றன கர்மா வினைப்படியே நடந்தது என்று கூறும் தரப்பினரது கருத்து நியாயமானதென்றால் ஏன் பிரபாகரனது மரணமும் அவ்வாறான ஒன்றாக எண்ணக்கூடாது?. இதை நான் தர்க்கத்துக்காகவே இங்கு பதிவிடுகின்றேன்.
மேலும் போராட்டக்காரர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து அமைதிவழியில் இந்த பிரச்சினையை சமாளிக்க எண்ணுகின்றனர்.
இது குறித்து பதில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி எனது கருத்தையும் அவரிடம் முன்வைத்திருந்தேன்.
 குறிப்பாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தில் முன்வைக்கும் நியாயத் தன்மைக்கு ஏற்ப தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கு அவர் அதைத்தான் தானும் எண்ணியிருப்பதாகவும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் தான் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாக நியமனமானால் அவர்களை அழைத்து பேசவுள்ளதாகவும் குறிபட்பிட்டுள்ளார்.
அதேபோல மஹிந்த தரப்பினரை பாதுகாப்பதற்கான தேவைப்பாடு ரணில் விக்கரமசிங்கவுக்கு இருக்கப்போவதில்லை.
ஆனால் தற்போதுள்ள அரசு ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற அரசியல் தேவை அவருக்கு இருக்காலம். அவரும் இந்நாட்டின் ஒரு சிறந்த அரசியல்வாதிதான்.
நாடு குழப்ப நிலையில் இருந்தபோது யாரும் பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வராதிருந்தபோது ரணில் விக்கரம சிங்கவே முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றிருந்தார்.
அதன்பின்னர் தற்போது அவருக்கு இந்த சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. அதற்கு அவர் சரியானவராகவே இருப்பதாக நான் கருதுகின்றேன்.
ஏனெனில் எனக்கும் இந்த நாடாளுமன்றில் 28 வருட ஜனநாயக அரசியல் அனுபவம் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை: