ஞாயிறு, 17 ஜூலை, 2022

7 வயது சிறுவனை கொலை செய்த 5 மாணவர்கள்.. டி.வி. சீரியலை பார்த்து கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் ! உத்தர பிரதேசம்

 கலைஞர் செய்திகளை - ரேஷிமா : 16 வயது மாணவர்கள் 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது தவறுதலாக ரூ.40,000 இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்த அவர், தனது நண்பர்களிடம் புலம்பியுள்ளார். எனவே, இதனை சரி செய்வதற்காக அவரது நண்பர்கள் ஒரு யோசனை வழங்கியுள்ளார். அதன்படி ஒரு சிறுவனை கடத்தி, அவரது பெற்றோரிடம் பணம் வசூலிக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவர்கள் அதே பள்ளியில் படிக்கும் 7 வயதுடைய சிறுவன் ஒருவரை, இரு சக்கர வாகனத்தில் தன்னுடன் அழைத்து கொண்டு அலிகர் பகுதிக்கு சென்றுள்ளனர்.


அங்கே அவரது மற்றொரு நண்பர் வீட்டில் இந்த சிறுவனை இருக்குமாறு கூறி, சிறுவனின் தந்தைக்கு போன் செய்து ரூ.40,000 கேட்டு மிரட்டுவதற்காக தயாராக இருந்துள்ளனர்.
இதனிடையே இந்த திட்டம் பலனளிக்கவில்லை என்றால், நாம் அனைவரும் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி பயந்துள்ளனர்.

எனவே எங்கே அந்த சிறுவன் தங்களை காட்டிக்கொடுத்து விடுவானோ என்று எண்ணிய சிறுவர்கள், தங்களது கைக்குட்டையை வைத்து அந்த சிறுவனின், முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர். இதையடுத்து சடலத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஆற்றங்கரையில் வீசியுள்ளனர். மறுநாள் ஆற்றங்கரையில் ஒரு சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, போலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

பின்னர், சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து உடலை உடற்கூறிவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்ததோடு, பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரிடமும் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது இந்த சிறுவர்களின் நடவடிக்கைகள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் திரும்பியது. இதையடுத்து அவர்களிடம் மாறி மாறி விசாரித்த போது, முதலில் ஒப்புக்கொள்ளாத அந்த சிறுவர்கள் பிறகு தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும் தாங்கள் அந்த கொலையை ஒரு டி.வி. சீரியலை பார்த்து செய்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் படி, அவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
.

கருத்துகள் இல்லை: