வியாழன், 21 ஜூலை, 2022

குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு 2 லட்சம் வாக்குகளால் வெற்றி

 மாலை மலர்  :  ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது  
புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர்.
பாராளுமன்றம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் மொத்தம் 31 இடங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது.


அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறப்பு பேனாவை பயன்படுத்தி எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 771 எம்.பி.க்களில் 8 பேர் வாக்களிக்கவில்லை.
 763 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
நாடு முழுவதும் உள்ள 4,025 எம்.எல்.ஏ.க்களில் 34 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடவில்லை. 3,991 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து இருந்தனர். இதனால் ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

ஒட்டுப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பிரத்யேக வாக்குப்பெட்டியை ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பி பயன்படுத்தி இருந்தது. கடந்த 18-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. பாராளுமன்ற வளாகத்தில் தனி அறையில் அவை வைக்கப்பட்டன.

கடந்த 2 தினங்களாக அந்த வாக்குப் பெட்டிகள் இருந்த அறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன. இதையும் படியுங்கள்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு ஓட்டு எண்ணிக்கைக்காக பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறை தயார் செய்யப்பட்டு இருந்தது.

காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்ற மேல்சபை செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் அதிகாரியுமான பி.சி.மோடி தலைமையில் அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் பணியை தொடங்கினார்கள். முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார். 15 பேரின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

திரௌபதி முர்மு 3,78,000 வாக்கு மதிப்பும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்கு மதிப்பும் பெற்றுள்ளனர். எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். இதன்மூலம் திரவுபதி முர்மு 2,32,400 வாக்கு மதிப்பு முன்னிலையில் இருக்கிறார். எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

கருத்துகள் இல்லை: