புதன், 4 ஆகஸ்ட், 2021

கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

Vigneshkumar -    Oneindia Tamil :   சென்னை: அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்து இருந்த நிலையில்,
இது தொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
அன்னை தமிழில் அர்ச்சனை' என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 06) அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்படவுள்ளது.
முதல்வர் வெளியிட்டார் முதல்வர் வெளியிட்டார்
இந்நிலையில் இதற்கான அறிவிப்புப் பலகையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அப்போது அமைச்சர் சேகர் பாபு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ குமரகுருபரன் உடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இந்த பலகையில் குருக்களின் பெயர்கள், அலைபேசி எண்கள் இடம் பெற்றிருக்கும்.

இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டரில், " தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, "அன்னைத் தமிழில் அர்ச்சனை" திட்டத்தின் அறிவிப்புப் பலகையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இதன் மூலம் திருக்கோயில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண் பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும்" என அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுவதை ட்விட்டர் தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: