வெள்ளி, 22 ஜனவரி, 2021

பாஜகவில் இணைந்த பெண் தாதா எழிலரசி: புதுவையில் தேடப்பட்டு வந்த குற்றவாளிக்கு கட்சியில் இடம்

புதுவையில் தேடப்பட்டு வந்த பெண் தாதா பாஜகவில் இணைந்தார்
பெண் தாதா எழிலரசி
BBC : புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த பிரபல பெண் தாதாவை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், பாதுகாப்பு கருதி பாஜகவில் இணைந்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த எழிலரசி(வயது 40) மீது கொலை வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல், வெடிமருந்து பயன்படுத்தி மிரட்டுதல், மோசடி வழக்கு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் காரைக்கால் பகுதி காவல்துறையினர் எழிலரசியை தேடிவரும் நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் >காரைக்கால் பிராந்தியம் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய தொழிலதிபர் ராமு (எ) ராதாகிருஷ்ணனின் இரண்டாவது மனைவி எழிலரசி, கணவர் ராமுவை தொழில் முன்விரோதம் காரணமாக 2013ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ராமுவின் முதல் மனைவி வினோதா மற்றும் புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் காரணமாக இருக்கலாம் என எழிலரசி தரப்பினர் கருதியதாக கூறப்படுகிறது.
புதுவையில் தேடப்பட்டு வந்த பெண் தாதா பாஜகவில் இணைந்தார்

"எழிலரசியின் கணவர் ராமு கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அய்யப்பன் என்பவரை காரைக்காலில் 2014ஆம் ஆண்டும், ராமுவின் முதல் மனைவி வினோதாவை சீர்காழியில் 2015ஆம் ஆண்டு எழிலரசி தரப்பினரால் கொலை செய்துள்ளனர். பிறகு கணவரின் கொலைக்குத் துணையாக இருந்தாக கூறி காரைக்கால் நிரவியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் என்பவர் 2017ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த மூன்று கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு எழிலரசி கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் எழிலரசியை, 2018ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதையடுத்து எழிலரசி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்," எனக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காரைக்காலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் எனக் கருதி, எழிலரசியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த எழிலரசி புதுச்சேரியில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

குறிப்பாக, "எழிலரசி மீது மூன்று கொலை வழக்குகள், கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், வெடிமருந்து பயன்படுத்தி மிரட்டுதல், மோசடி வழக்குகள், அடிதடி வழக்குகள் என இவர் மீது இதுவரை 14 வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த மாதம் 31ஆம் தேதி காரைக்கால் திருமலைராயன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் வந்ததையடுத்து எழிலரசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரை தேடி வரும் நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

புதுவையில் தேடப்பட்டு வந்த பெண் தாதா பாஜகவில் இணைந்தார்

எழிலரசி அவருடைய பாதுகாப்பு கருதி தான் இதுபோன்று கட்சியில் சேர்ந்துள்ளார். கட்சி பணி செய்யவோ, கட்சியை வளர்க்கவோ அவர் போகவில்லை. காவல் துறைக்குப் பயந்தே அவர் தற்போது கட்சியில் இணைந்துள்ளார். காவல் துறை தரப்பில் கடந்த சில நாட்களாக அவரை தேடி வந்தோம். தன்னை காவல் துறையினர் தேடி வருவது தெரிந்து இப்போது கட்சியில் இணைந்திருக்கிறார். தலைமறைவாக இருக்கும் அவரை தற்போது வரை தேடிக்கொண்டு வருகிறோம்," எனக் புதுச்சேரி யூனியன் பிரதேசக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி பாஜக மாநில தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதனிடம் விளக்கம் கேட்டபோது, "இதுவரை புதுச்சேரி பாஜகவில் நிறைய பேர் வந்து இணைந்திருக்கிறார்கள், அதைப் போன்று எழிலரசியும் இணைந்துள்ளார். எந்த கட்சியிலும் யாரு வேண்டுமென்றாலும் இணையலாம். அவருக்கு இதுவரை பொறுப்புகள் வழங்கப்படவில்லை. மாற்று கட்சியிலும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கூட கட்சியில் இணைந்திருக்கிறார்கள்.

கட்சியில் சேர்த்துக்கொள்ள யார் வந்தாலும் அவர்களை தவிர்க்க முடியாது. அவர்களுக்கு பாஜக பிடித்திருப்பதால் சேருகின்றனர். அவர் தன்னை திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். தற்போது அரசியல் காரணங்களுக்காக அவரை பற்றி தவறாகச் செய்தி பரப்பப்படுகிறது," எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: