செவ்வாய், 19 ஜனவரி, 2021

பாடம் படிக்கவில்லை என கூறி 11 வயது மகனை தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை.. ஐதராபாத்: தெலுங்கானா

malaimalar : 6-ம் வகுப்பு படிக்கும் தனது 11 வயது மகன் பாடம் சரியாக படிக்கவில்லை என கூறி அவனை தந்தையே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குஹட்பல்லி பகுதியை சேர்ந்தவர் பாலு. இவருக்கு 11 வயதில் சரண் என்ற மகன் உள்ளார். சரண் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சரண் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளான். இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுகிழமை இரவு சரண் தனது தாயுடன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது மதுபோதையில் வீட்டிற்கு வந்த தந்தை பாலு சிறுவனை அருகில் உள்ள கடைக்கு சென்று பீடி வாங்க அனுப்பியுள்ளார்.

சிறுவன் சரண் பீடி வாங்கிக்கொண்டு வந்து தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு மீண்டும் டிவி பார்க்க சென்றுள்ளான்.

அப்போது கோபமடைந்த தந்தை பாலு சரியாக படிக்கவில்லை, டியூசன் வகுப்புகளிலும் சரியாக பங்கேற்கவில்லை என கூறி தனது மகன் சரணிடம் வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார்.</p>

மேலும், சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார். தடுக்க வந்த சிறுவனின் தாயையும் பாலு தாக்கியுள்ளார்.

ஆத்திரம் அடங்காத பாலு வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சிறுவன் சரண் மீது ஊற்றியுள்ளார்.

பின்னர் சிறுவன் வாங்கித்தந்த பீடியில் தீப்பற்றவைத்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீக்குச்சியை மண்ணெண்ணையில் நனைத்திருந்த தனது மகன் சரண் மீது வீசினார். இதில் தீப்பற்றிய சிறுவன் சரண் அலறினான்.

இதை கண்டு அதிர்ச்சியட்டைந்த சிறுவன் சரணின் தாய் அதிர்ச்சியில் கத்தினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீப்பற்றி எரிந்த சிறுவன் சரணை கடுமையான தீக்காயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுவன் சரண் 60 சதவிகிதம் தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகனை தீவைத்து கொளுத்திய கொடூர தந்தை பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: