வியாழன், 26 ஏப்ரல், 2018

உச்சநீதிமன்ற நீதிபதியாக கேரள கிறிஸ்தவரான ஜோசப்பை நியமிக்க கொலிஜியம் மறுப்பு

tamilthehindu :உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜோசப்பை நியமிக்க மறுத்ததற்கு பெயர், மாநிலம்,
மதம் காரணமா?- மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
புதுடெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம். ஜோசப்பை (குட்டியில் மாத்யூ ஜோசப்) நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தும் அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது, இதைக்கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் கூடி உச்ச நீதிமன்றத்துக்கு இரு நீதிபதிகள் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதில், ஒருவர் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, மற்றொருவர் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்.

இதில் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்ட மத்தியஅரசு, ஜோசப் நியமனத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது. இதற்கு, கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. அந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய உத்தரவிட்டவர் நீதிபதி ஜோசப். ஆதலால், இப்போது அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு தடை செய்கிறது எனக் கூறப்டுகிறது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''இந்து மல்ஹோத்ரா உச்ச நீதிபதியாக பதவி ஏற்கப்போவதை கேட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேசமயம், மற்றொரு நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனத்தை ஏன் மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை.
ஜோசப் நியமனத்தை மத்திய அரசு எதற்காக நிறுத்திவைத்துள்ளது, அதற்கான காரணம் என்ன, அவர் சாந்திருக்கும் மாநிலம் காரணமா, அல்லது அவர் சாந்திருக்கும் மதம் காரணமாக, அல்லது உத்தரகாண்ட் வழக்கில் அவர் அளித்த தீர்ப்புதான் காரணமா'' என ப.சிதம்பரம்  கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிபதி ஜோசப் கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டம், அதிரம்புழா நகரில் பிறந்தவர். இவரின் தந்தை கே.கே.மாத்யூவும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். கடந்த 1982-ம் ஆண்டு சட்டம் முடித்து, வழக்கறிஞராக டெல்லியிலும், கேரளாவிலும் பணியாற்றினார். அதன்பின் கேரள உயர் நிதிமன்றத்தில் 2004-ம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் தற்போது உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜோசப் இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: