செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஸ்டாலின் : காகிதப்பூக்கள் மணக்காது .... கமல் : நான் பூவல்ல விதை ...

பூ அல்ல விதை: ஸ்டாலினுக்கு கமல் பதில்!
தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், தான் பூ அல்ல; விதை என்று நடிகர் கமல் பதிலளித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ‘உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ என்ற பெயரில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு தொடர்பாகத் தொண்டர்களுக்கு அவர் இன்று (பிப்ரவரி 20) எழுதியுள்ள கடிதத்தில், கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பு குறித்தும் அவர்களின் ஆலோசனைகள் குறித்தும் சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கழகம் எனும் ஆலமரத்தினைத் தாங்கி நிற்கும் இத்தகைய விழுதுகளும் வேர்களும் நாளுக்கு நாள் பெருகிப் பரவிக் கொண்டே இருக்கின்றன. ஆர்வம் அதிகரித்து அறிவாலயம் வருகின்ற தொண்டர்கள் பலரும் எளிய மனிதர்களாக இருக்கிறார்கள். கிராமத்தினர் பலர் காலில் செருப்புகூட அணிவதில்லை; உடைகள் கசங்கியிருக்கின்றன; ஆனால் கறுப்பு - சிவப்பு கரைவேட்டி அணிவதில் உள்ள கம்பீரத்தை வெளிப்படுத்தி, தங்கள் கொள்கை வைராக்கியத்தைக் காட்டுகிறார்கள்.
குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான். ‘நம் அனைவரையும் ஒரே தாய் பெற முடியாது என்பதால்தான், தனித்தனித் தாய்க்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கிறோம்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை மறக்க முடியுமா” என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
காகிதப் பூக்கள் மலரலாம், மணக்காது
அண்ணாவும் கருணாநிதியும் வளர்த்துள்ள கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, திமுக எனும் பேரியக்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது என்று கூறியுள்ள அவர், “பருவநிலை மாறும்போது ஒருசில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால் காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! திமுக என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும், தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் அரசியல் வருகையை குறிப்பிட்டே காகிதப் பூக்கள் மலராது என ஸ்டாலின் விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 23ஆம் தேதி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்திலும்,”அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன் பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக்கொண்டுதானிருக்கிறது” என்று ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பூ அல்ல; விதை
இந்நிலையில், ஸ்டாலினின் விமர்சனத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கமல், “ஸ்டாலின் என்னைக் குறிப்பிட்டு அவ்வாறு கூறியிருக்க மாட்டார் என நம்புகிறேன். அவ்வாறு கூறியிருந்தால் அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பூ அல்ல விதை. என்னை முகர்ந்து பார்த்தால் மணம் இருக்காது. விதைத்துப் பாருங்கள் முளைப்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோர் தனது பொதுக்கூட்டத்துக்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்ட கமல், தான் யாருடன் கூட்டணி வைப்பேன் என்று இதுவரை கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: