வியாழன், 22 பிப்ரவரி, 2018

திமுக பொருளாளராக ஆ.ராசா .... அறிவிப்பு எந்நேரமும் வரலாம்?

மின்னம்பலம் :“உடன் பிறப்புகளுடன் கள ஆய்வு என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் தனித்தனியாகச் சந்தித்துவருகிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். அந்தச் சந்திப்பில் நிர்வாகிகளின் குறைகளை மனுவாக எழுதி, அதே அரங்கில் வைக்கப்படும் குறை தீர்க்கும் பெட்டியில் போடச் சொல்லியிருந்தார் ஸ்டாலின். அந்தப் பெட்டி அங்கேயே சீல் வைக்கப்பட்டு ஸ்டாலின் வீட்டுக்கு நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்படி வந்த மனுக்களை ஸ்டாலின் படிக்க ஆரம்பித்துவிட்டார். கட்சிக்குள் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் எல்லாம் அடிமட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளை எப்படியெல்லாம் படாய்ப்படுத்துகிறார்கள் என்பதைத் தெளிவாக எழுதியிருக்கிறார்களாம்.
சென்னையை தாண்டியதும் இருக்கும் ஒரு மாவட்டத்தின் செயலாளர் மீதுதான் அதிக அளவிலான புகார்கள் வந்து குவிந்திருக்கின்றனவாம். அவர் முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர். ’நமக்கு தெரியாதுன்னு இவங்க என்னவெல்லாம் செஞ்சிருக்காங்க பாருங்க...’ என்று ஸ்டாலினே சொன்னதாகச் சொல்கிறார்கள்.
அதனால் முன்னாள் அமைச்சரான அந்த மாவட்டச் செயலாளரே மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு மாவட்டச் செயலாளர், ‘நம்ம மாவட்டத்துல போன எலெக்ஷன்ல ஜெயிச்சதே நான் மட்டும்தான். அப்படின்னா என்னோட பவர் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க. நான் சொல்றதையெல்லாம் கேட்டுட்டு இருக்கிறதா இருந்தால் இருங்க...அவரைப் போய் பார்க்கிறேன்னு யாராவது அந்தப் பக்கம் போனது தெரிஞ்சா நடக்கிறதே வேற’ என்று மிரட்டுறாரு. நாங்க அதிமுகவில் இருக்கும் யாரையும் பார்க்க போகலை. நம்ம கட்சியில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபரை மரியாதை நிமித்தமா நல்லது கெட்டதுன்னா போய் பார்க்கிறோம். அதைக்கூட அவரால தாங்கிக்க முடியலை’ என்று சில புகார்கள் போயிருக்கின்றன. இதையெல்லாம் கவனமாக குறிப்பெடுத்துக்கொள்கிறாராம் ஸ்டாலின்.
குறிப்பாக, மாவட்டச் செயலாளர்கள் மீது வந்திருக்கும் புகார்களை மட்டும் நிதானமாகப் படிப்பதுடன், அந்தப் புகார் பற்றிய உண்மைத் தன்மையையும் உடனுக்குடன் விசாரிக்கிறாராம். மனுக்களைப் படித்துக்கொண்டிருக்கும்போதே தனக்கு நெருக்கமானவர்களிடம் ஸ்டாலின் சொன்னது இதுதான்..
‘வந்த புகார்களை எல்லாம் படிக்கும் போது நிறைய களை எடுக்க வேண்டி இருக்கும்னு தோணுது. ஏதோ பேருக்காக புகாரை வாங்கினோம்னு இருக்கக் கூடாது. நிஜமாவே தப்பு செஞ்ச நிர்வாகிகளை மாற்றியாகணும். அப்போதான் எல்லோருக்கும் பயம் வரும். அது மாவட்டச் செயலாளராக இருந்தாலும் மாற்றுவோம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆக, விரைவில் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி அடுத்தடுத்த மட்டங்களில் உள்ள நிர்வாகிகள் வரை எல்லாவற்றிலும் மாற்றம் வரும் என்று சொல்கிறார்கள்” என்று முடிந்தது மெசேஜ். அதற்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப். மெசேஜ்ஜை அப்படியே காப்பி செய்து ஸ்டேட்டஸ் ஆக அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக். “நான் சொல்லப்போவதும் திமுக தகவல்தான். கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், ’திமுக நிர்வாகிகளுடன் தற்போது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திவரும் கள ஆய்வில் பங்கேற்போர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தலைமைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் பல நிர்வாகிகள் 2 பதவியில் இருப்பது தெரியவருகிறது. ஆகவே 2 பதவிகள் வைத்திருக்கும் திமுக நிர்வாகிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜினாமா செய்து மாவட்டச் செயலாளரிடம் அளிக்க வேண்டும். அதனை மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்வதோடு அப்படி ராஜினாமா செய்த பதவிகளுக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் விவரங்களை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.
செயல் தலைவர் ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகுதான் பொதுச் செயலாளர் அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பைத் தயாரிக்கும்போதே, ‘நானே திமுகவில் இரட்டைப் பதவி வைத்திருக்கிறேன். பொருளாளர் பதவியும் என்னிடம் இருக்கிறது, செயல் தலைவர் பதவியும் என்னிடம் இருக்கிறது’ என்று அன்பழகனிடம் குறிப்பிட்டுச் சொன்ன ஸ்டாலின், இரண்டில் ஒன்றை விடுவது என்ற அடிப்படையில் பொருளாளர் பதவியை விட்டுவிடுவது என்ற முடிவில் இருக்கிறாராம்.
பொருளாளர் பதவி திமுகவில் முக்கியமான பதவி. அதைப் பெற்றுவிட ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலர் காய் நகர்த்திவருகிறார்கள். ஆனால், பொருளாளர் பதவிக்கு உரியவராக ஸ்டாலின் மனதில் இருப்பது முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசாதானாம். இப்போது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கிறார் ராசா. 2ஜி வழக்கிலிருந்து விடுதலை ஆனபோதே, ராசாவுக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படும் எனக் கட்சிக்குள் பேசப்பட்டது. ஸ்டாலினும் அதை ஆமோதித்தார். அதனால், இப்போதைய சூழ்நிலையில் ஆ.ராசாவுக்குக் கட்சிப் பொருளாளர் பதவியை கொடுக்கலாம் என ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடமும் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக, எந்த நேரத்திலும் மாற்றம் வரலாம்!” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை: