ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

நடிகர் சத்யராஜ் : அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது!

அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது!மின்னம்பலம் :‘அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது; அந்த நடிகர்களுக்கும் நல்லது’ என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நேற்று (பிப்ரவரி 17) சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ், சுப.வீரபாண்டியன், திருச்சி சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய சத்யராஜ், “எனக்கு உணர்வுகளால் மட்டுமே பேசத் தெரியும். புள்ளி விவரங்களால் பேசத் தெரியாது. நதியே சமூகத்திற்கு சொந்தமில்லாமல் ஆகிவிட்டது. முதலில் நதியை சமூகத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஒரு இடத்தில் உற்பத்தியானால் அந்த நதி அவர்களுக்குச் சொந்தமாகிவிடுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியானதாக இல்லை. தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் சொல்லிக்கிறேன். தண்ணீர் நமக்கான பிரச்சினை இல்லை என்று ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள். அப்படி நினைக்க வேண்டாம். ஒருநாளில் அது நம் தலையின் மீதுதான் விழும்.
அதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்று தண்ணீரின் அவசியத்தை உணர்த்தினார்.
“ஒரு பிரபல சினிமா நடிகராகவே இருப்பதாலேயே அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கும் என நினைக்கக்கூடாது. அவ்வாறு, தனக்கு எல்லாம் தெரியும் என அந்த நடிகர் நினைப்பது தவறு. நடிகர்களுக்கும் எல்லாமும் தெரியும் என மக்கள் நினைப்பது மிகப்பெரும் தவறு” என்றதுடன், “அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது” எனவும் மறைமுகமாக விமர்சித்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜ் இவ்வாறு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: