வெள்ளி, 22 டிசம்பர், 2017

தமிழக அரசு கைவிரிப்பு ! 271 மீனவர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று நீதிமன்றத்தில்


271 மீனவர்களின் நிலை? தமிழக அரசு!மின்னம்பலம் :ஓகி புயலால் பாதிக்கப்பட்ட 271 மீனவர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஓகி புயலின்போது மாயமான 551 மீனவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று குளச்சலைச் சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் மாயமான மீனவர்களைக் கண்டுபிடிப்பது குறித்து 22ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இன்று (டிசம்பர் 22) தமிழக அரசு நீதிமன்றத்தில் அளித்த வாய்மொழி அறிக்கையில், தமிழகத்தில் டிசம்பர் 20 வரை 318 மீனவர்கள் மாயமான நிலையில் நேற்று 47 பேர் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 271 மீனவர்களைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இவர்களில் 28 பேர் வெளி மாநிலத்தவர்கள் என்றும் அனைவரும் 25ஆம் தேதிக்குள் மீட்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனுதாரர் மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
மீனவர்களை மீட்க எத்தனை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன என்று விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அரசு அவகாசம் கேட்டுள்ளதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: