வியாழன், 21 டிசம்பர், 2017

ஜெயா விடியோவை பார்த்து பயப்படும் தேர்தல் ஆணையம் + இபிஎஸ் + ஒபிஎஸ் ?

`டீ கடை’ ஆணையம்..! ``இட்லி தின்னாரா.. இடியாப்பம் தின்னாரா.. இறந்தாரா.. அல்லது கொல்லப்பட்டாரா..” என்று பெரும் மர்மமாக இருந்த ஜெயாவின் மர்ம மரணத்தில் இன்று வெளியான ஜெயாவின் வீடியோவின் மூலம் மிக முக்கியமான முடிச்சு ஒன்று அவிழ்க்கப்பட்டிருக்கிறது.
என்னளவில் அது உண்மையான வீடியோவாகவே தோன்றுகிறது.
அது உண்மையானதா போலியானதா என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டியது அவரது மரணத்தை விசாரிக்கும் ஆணையத்தின் வேலை.
நாம அந்த ஏரியாவுக்குள் போக வேண்டியதில்லை.
ஆனால் அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பன்னீர் செல்வம் பழனிசாமி வகையராக்கள் பதட்டமடைந்ததுக்கு சமமாக தேர்தல் அணையமும் பதட்டமடைகிறது.
அந்த வீடியோவை ஊடகங்கள் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிடுகிறது..
தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது..

ஜெயாவின் மரணமும்.. இப்போது அவர் தொடர்பாக வெளியான வீடியோவும் இந்தியாவைப்பொருத்தளவில் ஒரு முக்கியமான செய்தி.
தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது என்று உத்தரவிடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால் ஒரு மிக முக்கியமான செய்தியை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடுவது என்பதெல்லாம் அப்பட்டமாக ஊடகங்களின் கழுத்தில் கத்தியை சொருகுவதுபோன்றதுதான்.
ஆர்.கே.நகரில் பணமழை கொட்டப்படுவதையும்.. மன்னார்குடிக்கும் மங்குனி அமைச்சர்களுக்குமான மோதலையும் கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை.
இரண்டு தரப்பில் எவர் ஜெயித்தாலும் தமிழர்களுக்கு எந்த மாற்றமும் வரப்போவதில்லை.
ஆனால் ஜெயாவின் மரணம் தொடர்பான செய்தியையே வெளியிடக்கூடாது என்பது எந்த வகையில் நியாயம்.
ஒரு செய்தியை வெளியிடணுமா.. வேண்டாமா என்பதை பத்திரிகை ஊடகங்களின் ஆசிரியர்கள் முடிவு பண்ண வேண்டியது.
ஆனால் அதை தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது..
தங்களின் உரிமை பறிக்கப்படுவதை தமிழக ஊடகங்கள் அப்படியே வேடிக்கைப்பார்க்கின்றன.
ஊடகங்கள் ஒளிபரப்பவில்லையென்றாலும்,
எல்லோர் போனிலும் ``ஜெயா ஜூஸ் குடித்துக்கொண்டிருக்கிறார்’’ என்பதை `டீ கடை’ ஆணையத்திற்கு யாராவது சொல்லுங்க ப்ரோ.. ;)
-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா

கருத்துகள் இல்லை: