திங்கள், 18 டிசம்பர், 2017

ஸ்டாலின் : ஜெயலலிதா மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓபிஎஸ்தான்; அப்போலோ ரெட்டி அதை உறுதி செய்திருக்கிறார்:

tamilthehindu :மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓ.பன்னீர்செல்வம் என்று நான் சொல்லவில்லை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இப்போது அதை அப்போலோ மருத்துவர் ரெட்டி உறுதி செய்திருக்கிறார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை ஸ்டாலின் இன்று சந்தித்தார். ஆளுங்கட்சியினர் மேற்கொண்டு வரும் தேர்தல் முறைகேடுகள் குறித்து ஸ்டாலின் ஆதாரங்களுடன் விக்ரம் பத்ராவிடம் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பிலும், ஆளும் கட்சியிலிருந்து பிரிந்து இன்னொரு அணியாக போட்டியிடும் வேட்பாளரின் சார்பிலும் என்னென்ன அக்கிரமங்கள், அநியாயங்களை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி, இடைத்தேர்தல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம்வை சந்தித்து, திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை வழங்கியிருக்கிறோம்.


அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்து, 11 புகார்களை கொடுத்திருந்தோம். ஏறக்குறைய 100 கோடி ரூபாய் பணம் ஆளும் கட்சியின் சார்பிலும், தினகரன் அணி சார்பிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுகுறித்தும் புகார் அளித்துள்ளோம்.
குறிப்பாக, ரூ.2 கோடி வைத்திருந்த ஒரு அதிமுகவைச் சேர்ந்த நபரைப் பிடித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தால், அவரிடம் இருந்தது சில ஆயிரங்கள் மட்டும்தான் என்று காவல்துறை சார்பில் செய்தி வெளியாகிறது. இதையெல்லாம் காவல்துறை உயரதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால், அவர்கள் கண்டும், காணாமலும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அராஜகங்களை எல்லாம் மீறி, நேற்றைய தினம் மட்டும் ரூ.20 கோடி வைத்திருந்த அதிமுகவினரை, திமுக தோழர்கள் பிடித்து ஒப்படைத்தாலும், அவர்களை எல்லாம் விட்டு விடுகிறார்கள்.
இப்படி, அதிமுக ஆட்சியின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, அதேபோல தினகரனும் சேர்ந்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் பட்டப்பகலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மேற்பார்வையில்தான் இது நடந்துள்ளது. அதுமட்டுமல்ல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்பட பல அமைச்சர்களின் மேற்பார்வையில் வெளிப்படையாகவே பண விநியோகம் நடந்துள்ளது. இதுகுறித்து, காவல்துறை ஆணையரை பலமுறை தொடர்பு கொண்டு நாங்கள் புகார் அளித்தோம். தொடர்ந்து, தொலைக்காட்சிகளில் இதுபற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இப்படி நடக்கிறதா என்று அவர் எங்களிடத்தில் கேள்வி எழுப்புகிறார். அதேபோல, தமிழக தேர்தல் ஆணையர் லக்கானியை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.
எனவே, தேர்தல் ஆணையமும், காவல்துறையும் இப்படிப்பட்ட அக்கிரமங்களுக்கு எல்லாம் திட்டமிட்டு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை எல்லாம் ஆதாரங்களோடு நாங்கள் இன்று புகார் மனுவாக தந்திருக்கிறோம். எங்கெல்லாம் பண விநியோகம் நடைபெற்ற இடங்களில் திமுக தோழர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்கள். அந்த வீடியோக்களையும் ஒரு பென் ட்ரைவில் ஆதாரமாக இணைத்து புகார் மனு அளித்துள்ளோம்.
ஏற்கெனவே ஒருமுறை, 89 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றது வருமான வரித்துறை சோதனையில் ஆதாரத்துடன் கிடைத்ததால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதில், தேர்தல் ஆணையமும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிடைத்த தைரியத்தில்தான் இப்போது நடைபெறும் இடைத்தேர்தலில் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் அளவுக்கு பட்டவர்த்தனமாக, பட்டப்பகலில் பண விநியோகம் செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, இனி வரும் காலத்தில் அவர்கள் தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளோம்.
அதிமுகவின் வெற்றியை தடுக்க திமுக இப்படி செயல்படுவதாக தம்பிதுரை தெரிவித்து இருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் படுத்து, உருண்டு புரண்டாலும், கோடி கோடியாக பணம் கொடுத்தாலும், பல குட்டிக் கரணங்களை அவர்கள் போட்டாலும், அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. எனவே, தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அதிகாரிகளிடம் கோரவில்லை, அதிமுகவினர் செய்து வரும் தேர்தல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பணம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருக்கலாம். காரணம், ஏற்கெனவே ஒருமுறை 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது போல, டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை இடைத்தேர்தலில் ஏற்பட்டு இருப்பதால், தோல்வியில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கூட இப்படி செய்யலாம்.
டிடிவி தினகரன் தரப்பில் வழங்கப்பட்ட 30 லட்சம் ரூபாய் பணம் அதிமுகவினரால் கைப்பற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
யாராக இருந்தாலும், பணம் கொடுப்பது ஆதாரங்களுடன் பிடிபட்டால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. எனவேதான் நாங்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்.
அதிமுக வேட்டியணிந்து திமுகவினர் பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள். அது உண்மையாக இருந்தால், அதற்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் பிடித்து, தண்டனை வாங்கிக் கொடுக்கட்டும்.
முன்பு சொன்னதற்கு நேர்மாறாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஜெயலலிதா ஆபத்தான நிலையில் இருந்தார் என்று இப்போது அப்போலோ மருத்துவமனை தலைவர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விளக்கமளிக்க வேண்டும். காரணம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓ.பன்னீர்செல்வம் என்று நான் சொல்லவில்லை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இப்போது அதை அப்போலோ மருத்துவர் ரெட்டி உறுதி செய்திருக்கிறார். எனவே, ஜெயலலிதா மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஒ.பன்னீர்செல்வம்தான்'' என்று ஸ்டாலின் கூறினார்

கருத்துகள் இல்லை: