செவ்வாய், 14 ஜூன், 2016

தேமுதிக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியில்லை..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவ இருப்பதாக விஜயகாந்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேட்டதும், விஜயகாந்த் மிரண்டுபோய் விட்டாராம். கட்சியின் ஆணிவேர்களாக இருக்கும் நபர்களே மாற்றுக்கட்சிகளுக்குத் தாவ இருப்பதாக தகவல் கிடைத்தவுடன்தான், கட்சி நிர்வாகிகளை அழைத்து கோயம்பேடு அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
தேமுதிக-வில் சுமார் 20 மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இந்த மாவட்டச் செயலாளர்கள்தான் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர்களை அழைத்து வரவேண்டும்.


ஆனால், செலவுக்குப் பயந்துகொண்டு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் நிர்வாகிகளை அழைத்து வரவில்லை. 'விருப்பமுள்ளவர்கள் நீங்களே செல்லுங்கள்' என சொல்லிவிட்டார்களாம். இதனால், கூட்டத்துக்குப் பெரிய அளவில் நிர்வாகிகள் யாரும் வரவில்லை. காரணம் தேர்தலுக்கு முன்பு விஜயகாந்த் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ரூபாய் 10 லட்சம் தருவதாக சொல்லியிருந்தார். பிறகு ரிசல்ட்டுக்கள் வந்ததும் தருவதாகச் சொல்லியிருக்கிறார். தேர்தலில் தோற்ற பிறகு கட்சியினர் பலர் கடன்சுமையைச் சொல்லி பணம் கேட்டிருக்கிறார்கள். அப்போதும் தந்து விடுவதாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது, ‘எங்கிட்ட காசில்ல...’ என்று சொல்லிவிட்டாராம். இதனால்தான் பல நிர்வாகிகள், வேட்பாளர்கள் வரவில்லை.
இதைத்தாண்டி வந்தவர்களும் கொந்தளிப்போடுதான் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். நிர்வாகிகள் பலர், கூட்டத்துக்கு வரும்போதே எந்த உற்சாகமும் இல்லாமல் மிகவும் சோர்வாகத்தான் வந்திருக்கிறார்கள். கூட்டம் முடிந்தபிறகு அதைவிட சோர்வாகி தளர்ந்துவிட்டார்கள். காரணம், விஜயகாந்த் நிர்வாகிகள் சொல்வதைக் கேட்டு, அவர்களை சமாதானம் செய்யவில்லையாம். ‘கூட்டணியால்தான் தோற்றோம்... திமுக-வோடு கூட்டணி வைத்திருக்க வேண்டும். அது இல்லாமல் போனதால்தான் இவ்வளவும் மோசமான தோல்வி’ என்று நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் விஜயகாந்த், நிர்வாகிகளை ஆறுதல் சொல்லி சமாதானம் செய்யாமல் தன்னுடைய ‘ஸ்டாண்ட்’ சரிதான் என்று பேசியிருக்கிறார். இதனால்தான் கட்சியினர் கொந்தளிப்போடு உள்ளனர். மேலும் பல நிர்வாகிகள், ‘உள்ளாட்சி தேர்தலில் நிற்பதற்கான பணமோ, நம்பிக்கையோ இல்லை. எனவே, நாங்கள் போட்டியிட மாட்டோம்’ என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். கட்சி நிர்வாகிகளிடமும் இதுபற்றி பேசியிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல் வருவதால், விரைவில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. விஜயகாந்த்தின் முடிவுக்கு பிறகு, ‘திமுக கூட்டணில சட்டசபை தேர்தல்ல 59 சீட்டும்... உள்ளாட்சியில 30% இடமும் தர்றோம்னு சொன்னாங்க... இப்ப எல்லாம் போச்சு... உள்ளாட்சி தேர்தல் எவ்ளோ முக்கியம்...’ என அலுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.minnambalam.com

கருத்துகள் இல்லை: