வெள்ளி, 17 ஜூன், 2016

BBC : பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. சுடப்பட்டு கத்தியால் குத்தி கொலை!

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.  சம்பவ இடத்தில் தடயம் சேகரிக்கும் போலீசார் இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர். இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர். இது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது

 தாக்குதல் நடந்த இடத்தில் போலீசார் இச் சம்பவம் குறித்து மேற்கு யார்க்ஷயர் போலீஸ் மற்றும் குற்றவியல் துறை ஆணையர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேரில் பார்த்த பல சாட்சிகளிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 பிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார். ஜோ காக்ஸ் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டேவிட் கேமரன், ''ஜோ காக்ஸ் மரணம் ஒரு துயரச் சம்பவம். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, அக்கறை கொண்ட எம்.பி. அவரது கணவர் பிரேண்டன் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 உள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட மேலும் பல தலைவர்கள் ஜோ காக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  BBC.Com


லண்டன்: இங்கிலாந்தில் பெண் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியின் பேட்லி மற்றும் ஸ்பென் ஆகிய பகுதிகளின் எம்.பி.,யாக ஜோ காக்ஸ் (41) என்ற பெண்மணி உள்ளார். இவர், தனது தொகுதிக்கு உள்பட்ட பிர்ஸ்டால் என்ற இடத்தில் நடந்துசென்ற கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த மர்ம நபர் ஜோ காக்ஸ் மீது 3 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். மேலும் கத்தியாலும் குத்தியுள்ளார். இதில் மயங்கி விழுந்த ஜோ காக்ஸ் படுகாயம் அடைந்தார். இதேபோன்று, ஜோ காக்ஸ் உடன் சென்ற நபரும் தாக்குதலுக்கு ஆளானார். இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், ஜோ காக்ஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகளவு ரத்தம் வெளியேறியதால், அவர் ஆபத்தான நிலைமையில் உயிருக்குப் போராடி வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். ஜோ காக்ஸ் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய 52 வயதான அந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் பிரிட்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது பற்றி பொது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில், ஜோ காக்ஸ் ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/labour-mp-jo-cox-dies-after-being-shot-stabbed-256199.html

கருத்துகள் இல்லை: