ஞாயிறு, 8 நவம்பர், 2015

திமுக தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை...பிரேமலதா திமுகவை விமர்சிப்பது அதிக சீட் கேட்கத்தான்...

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க, தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, ரகசிய பேச்சு துவங்கப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.அ.தி.மு.க.,வை எதிர்க்க கூட்டணி அவசியம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், மகளிர் அணி செயலர் கனிமொழியும் கருதுகின்றனர். ஆனால், தனித்தே போட்டியிட, பொருளாளர் ஸ்டாலின் விரும்புகிறார். அதற்கு, கூட்டணி சேர, ஆட்சியில் பங்கு வேண்டும் என, நெருக்கடி கொடுப்பது தான் காரணம். ஆனால், தே.மு.தி.க., - காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, கனிமொழி, களமிறங்கி உள்ளார். கனிமொழியின் ஆதரவாளர்கள் சிலர், சமீபத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். அப்போது, இரண்டு கட்சிகளும் சேர வேண்டிய அவசியத்தை உணர்த்தியவர்கள், 'சீட்' பேரம் குறித்தும் பேசியுள்ளனர். இந்த தகவல் விஜயகாந்திடம் சொல்லப்பட்டுள்ளது. அவர், 'டிசம்பரில் நடக்கும் ராகு - கேது பெயர்ச்சிக்கு பின், கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம்' என கூறியுள்ளார்.


இது குறித்து, கட்சி வட்டாரம் கூறியதாவது:தே.மு.தி.க.,வுக்கு, 60; காங்கிரசுக்கு, 30 சீட் வழங்க, தி.மு.க., தயாராக இருப்பதாக, விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்களிடம், தி.மு.க., தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், 70 சீட் எதிர்பார்ப்பதாக, தே.மு.தி.க., தரப்பினர் தெரிவித்ததாகவும்; பேசிக்கலாம் என, கனிமொழி ஆட்கள் கூறியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால், இரண்டு கட்சிகளுக்கும் இடையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு துவங்கி உள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில், தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், தே.மு.தி.க., தலைவர்களுடன் பேசுவர். பின் ஸ்டாலின், விஜயகாந்துடன் பேசிய பின், விஜயகாந்த், கருணாநிதியை சந்தித்து பேசுவார். இதில், ஜோதிடர்களின் ஆலோசனையும் இருப்பதால், டிசம்பரில், ராகு - கேது பெயர்ச்சிக்குப் பின், அணி மாற்றங்கள் நடக்கும். இவ்வாறு கட்சி வட்டாரம் தெரிவித்தது.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: