திங்கள், 9 நவம்பர், 2015

உமாபாரதி : பாஜக எம்பி சத்ருக்கன் சின்ஹா நிதிஷ்குமாரை சந்தித்து புகழ்ந்தது கூட்டு சதி


பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக
வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவருக்கு எதிராக மறைமுகமாக கூட்டு சதி நடந்துள்ளதாக மத்திய மந்திரி உமா பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உமா பாரதி, சகிப்புத்தன்மை, இடஒதுக்கீடு, மாட்டுக்கறி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுத்தி கொண்டதாக குற்றம்சாட்டினார். மேலும், நிதிஷ்குமாரை சந்தித்த சத்ருகன் சின்கா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சத்ருகன் சின்கா பா.ஜ.க.,விற்கு எதிர் நிலைப்பாடு கொண்டவராக மாறியுள்ளார். கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார். முன்னதாக, பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பா.ஜ.க., எம்.பி.,யும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்கா இன்று சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சின்கா, நிதிஷ்குமாரை புகழ்ந்தும் பேசினார்.


இதனிடையே, சத்ருகன் சின்கா குறித்து பேசிய பா.ஜ.க., பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா “ஒரு கார் செல்லும்போது, அதனுடன் சேர்ந்து ஒரு நாயும் செல்கிறது. ஆனால், தன்னால்தான் அந்த கார் செல்வதாக அந்த நாய் நினைத்துக் கொள்கிறது. ஒரு கட்சி தனிப்பட்ட நபர்களை சார்ந்தது இல்லை. அது ஒரு முழு அமைப்பு. அங்கு பல்வேறு மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

ஏற்கனவே ஷாருக்கான் குறித்து கைலாஷ் விஜய் வர்கியா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சத்ருகன் சின்காவை நாயுடன் ஒப்பிட்டு கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: