வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

தினமலர்: கனிமொழியுடன் கைகோர்த்த ஸ்டாலின் !

அழகிரியை கட்சியில் சேர விடாமல் செய்வதற்காக, கட்சியில் எதிரும் புதிருமாக இருந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழியும், திடீரென கைகோர்த்திருப்பது, கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தி.மு.க., வட்டாரத்தினர் கூறியதாவது: தி.மு.க.,வில் கடந்த பல ஆண்டுகளாகவே, ஸ்டாலினும், கனிமொழி யும் எலியும், பூனையுமாக தான் இருந்து வருகின்றனர். கட்சியில் எப்போதெல்லாம் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் தன் முழு வலுவையும் பயன்படுத்தி, அதற்கு கட்டை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார், ஸ்டாலின். அதனாலேயே, கட்சியில் கனிமொழியால் பெரிய அளவிற்கு வளர முடியாமல் இருந்தது. இதற்காக, சமயங்களில் ஸ்டாலின் தன்னுடைய பரம வைரியாக கருதும், சகோதரர் அழகிரியுடன், அவ்வப்போது சமாதானம் செய்து கொண்டதும் உண்டு. இருந்தும் கட்சியில், தவிர்க்க முடியாத சக்தியாக, கனிமொழி தன்னை வளர்த்துக் கொண்டே வந்தார்.
சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு, கனிமொழியை பிரசாரத்துக்கு வரக்கூடாது என, இருவரும் சொல்லி தடை ஏற்படுத்தினர். ஆனாலும், ஏற்காட்டில் நடந்த இடைத்தேர்தலுக்கு பிரசாரத்துக்குச் சென்று, அங்கிருக்கும் வன்னியர் சமுதாய ஓட்டுகளை, பெரிய அளவில் கட்சிக்கு வாங்கித் தர பாடுபட்டார். அதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக்கினார், கருணாநிதி. அடுத்ததாக அவரை கலை, இலக்கிய பேரவையின் தலைவராக்கினார்.


சமீபத்திய பொதுக்குழு மூலம், கட்சியின் மாநில மகளிரணி செயலராக, கனிமொழி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கட்சி படுதோல்வியை சந்தித்து விட, கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் அழகிரியை, மீண்டும் கட்சியில் இணைத்து, கட்சிக்கு புது தெம்பூட்டும் வேலையில், கருணாநிதி தீவிரமாக இருக்கிறார். இதற்கு கனிமொழி ஆதரவாக இருக்கிறார் என்றதும், இந்த முயற்சிக்கு தடை போட விரும்பிய ஸ்டாலின், திடீரென கனிமொழியுடன் சமரசமாகி இருக்கிறார்.



கட்சியை வலுப்படுத்த...:

இருவரும் கைகோர்த்து, கட்சியை வலுப்படுத்த பலமான திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தொழிலதிபர் திருவேங்கடம் ஆகியோர் உறவுப் பாலமாக இருந்து, ஸ்டாலின் - கனிமொழி சந்திப்பை நிகழ்த்தி இருக்கின்றனர். குறுகிய கால இடைவெளியில், இருவரும் நான்கு முறைக்கும் கூடுதலாக சந்தித்து பேசியிருக்கின்றனர். இதனால், கட்சியில் அழகிரியை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு தள்ளிப் போகும் என தெரிகிறது. இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் தினமலர்.com

கருத்துகள் இல்லை: