செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஜவாஹிருல்லா:கச்சத்தீவு விழாவுக்கு தமிழக அரசு கப்பல் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எதிர்வரும் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தமிழக நாட்டுப்படகு மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசிற்கு இடையேயான போர் துவங்கிய 1983–ம் ஆண்டிற்கு முன்பு வரையிலும், 2001 மற்றும் 2002 ஆண்டுகளில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் போர் நிறுத்தம் ஏற்பட்ட காலங்களிலும் ராமேசுவரத்தில் இருந்து பாய்மர படகு மற்றும் நாட்டுப்படகில் தான் மீனவர்கள் குடும்பத்தோடு சென்று வந்துள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நாட்டுப்படகுகளில் பக்தர்கள் கச்சத்தீவு செல்வது பாதுகாப்பு இல்லை என்று கூறி நாட்டுப்படகுகளில் செல்ல தடைவிதிப்பது கண்டனத்திற்குரியது. விசைப்படகு கடலில் மூழ்காதா? நாட்டுப்படகுகள் மட்டும் தான் கடலில் மூழ்குமா? திருவிழாவின் போது ராமேசுவரம் மற்றும் கச்சத்தீவு கடல் பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்தியா மற்றும் இலங்கை கடற்படையினர் தான் பல கப்பல்களில் ரோந்து பணியில் ஈடுபடுகிறனர். அப்படியிருக்க படகில் ஏதாவது பிரச்சனை என்றாலும் ரோந்து பணியில் உள்ளவர்களால் காப்பாற்றி விட முடியுமே? இந்த ஆண்டு திருவிழாவிற்கு செல்வதற்கு படகிற்கு ரூ.1000, விழா கமிட்டிக்கு தனியாக ரூ.300 என மொத்தம் ரூ.1,300 ஒரு நபருக்கு வசூல் செய்யப்படுகிறது. இவ்வளவு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதால் ஏழை மீனவ மக்கள் அந்தோணியார் திருவிழாவிற்கு செல்ல முடியாமல் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். ஒரு நாட்டுப்படகில் 15 பேர் வரையிலும் செல்வதற்கு மொத்தமே ரூ.1,300 செலவில் சென்று திரும்ப முடியும். அதாவது ஒரு நபர் நாட்டுப்படகில் கச்சத்தீவிற்கு சென்றுவர ரூ. 100 மட்டும் போதுமானது. எனவே ஜெருசலம் புனித பயணம் செல்ல கிருஸ்தவர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்குவது போல கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழக அரசு கப்பல் ஏற்பாடு செய்து அழைத்து செல்ல வேண்டும் அல்லது நாட்டுப்படகில் செல்ல விரும்பும் ஏழை மீனவர்கள் தமிழக அரசு பாதுகாப்பாக அழைத்து வர வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: