திங்கள், 26 ஜனவரி, 2015

சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் விபரம் :கலைப்புலி தாணு தலைவர்,தியாகராஜன் பொருளாளர் .....

சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 438 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
தேர்தல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2015–2017–ம் ஆண்டுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது.
இந்த சங்கத்தில் சில நடிகர்–நடிகைகள் மற்றும் டைரக்டர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஓட்டு போட தகுதியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 967 பேர். ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.

சரத்குமார் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்–நடிகைகள் ‘கியூ’வில் நின்று ஓட்டுப்போட்டார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன், நாசர், பிரகாஷ்ராஜ், உதயநிதி ஸ்டாலின், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், நடிகைகள் ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஜெயசித்ரா, டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், சரண், பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன் உள்பட மொத்தம் 770 பேர் ஓட்டுப்பதிவு செய்தார்கள்.
எஸ்.தாணு வெற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு ‘கலைப்புலி’ எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், மன்சூர் அலிகான், ஹென்றி, ராஜேந்திரன் ஆகிய 5 பேர் போட்டியிட்டார்கள். அதில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு வெற்றி பெற்று, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓட்டு விவரம் வருமாறு:
பதிவான ஓட்டுகள்– 770.
‘கலைப்புலி’ எஸ்.தாணு– 565.
ஏ.எல்.அழகப்பன்– 127.
மன்சூர் அலிகான்– 29.
ஹென்றி– 21.
ராஜேந்திரன்– 4.
செல்லாதவை– 24.
துணைத்தலைவர்கள் 2 துணைத்தலைவர்களுக்கான தேர்தலில் எஸ்.கதிரேசன் 484 ஓட்டுகளும், பி.எல்.தேனப்பன் 355 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றார்கள்.
டி.ஜி.தியாகராஜன் 621 ஓட்டுகள் பெற்று பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 செயலாளர்கள் பதவிக்கு டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.
21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மொத்தம் 73 பேர் போட்டியிட்டார்கள். இதற்கான ஓட்டு எண்ணிக்கை நள்ளிரவு வரை நடந்தது. அதன் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாக இருந்து, இந்த தேர்தலை நடத்தினார். சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலையொட்டி ஓட்டுப்பதிவு நடைபெற்ற கந்தசாமி நாயுடு கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி ‘கலைப்புலி’ எஸ்.தாணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை நம்பி வாக்களித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தோல்வியடைந்தவர்களையும் அரவணைத்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தை வெற்றிக்கரமாக நடத்தி செல்வேன். அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் காக்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார் dailythanthi.com

கருத்துகள் இல்லை: