புதன், 28 ஜனவரி, 2015

ஆடம்பர திருமணங்களுக்கு வரி விதிக்கப்படும்! கர்நாடகாவில் புதிய சட்டம் வருகிறது

பெங்களூரு: ஆடம்பர திருமணங்களுக்கு கடிவாளம் போட, கர்நாடக அரசு, புதிய சட்டத்தை வடிவமைக்க தீர்மானித்து உள்ளது. இச்சட்டம், வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட உள்ளது.காங்., அரசு ஆட்சிக்கு வந்தவுடன், மூட நம்பிக்கைகள் தடை மற்றும் ஆடம்பர திருமணங்களை தடை செய்யும் மசோதாக்களை அமல்படுத்த முன்வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி, விவாதத்துக்கு உள்ளானது. எனவே, இவ்விரு மசோதாக்களையும் பரிசீலிக்கும்படி, சட்டக் கமிஷனிடம், அரசு கேட்டு கொண்டது.சட்டக் கமிஷனும், முதலில் ஆடம்பர திருமண மசோதாவை பரிசீலித்து, இப்படிப்பட்ட மசோதாக்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த திருத்த மசோதாவை செயல்படுத்தலாம் என்று, சிபாரிசு செய்துள்ளதாக தெரியவந்து உள்ளது. சட்டக் கமிஷனிடமிருந்து வந்த சிபாரிசை, சட்டத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு அனுப்பி உள்ளது. இத்துடன், மசோதாவை வடிவமைக்கும்படியும் தெரிவித்து உள்ளது. மசோதா தயாரானவுடன், அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்று, வரும் சட்டசபை கூட்டத்தொடரிலோ அல்லது பட்ஜெட் கூட்டத் தொடரிலோ தாக்கல் செய்ய, அரசு தீர்மானித்து உள்ளது. சமீப நாட்களாக, ஆடம்பர திருமணங்கள் அதிகரித்துள்ளன. இதனால், பொருளாதார ஏற்றதாழ்வுகள் ஏற்படுகின்றன. லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு நடைபெறும் திருமண விருந்துகளில், உணவுகள் வீணாக்கப்பட்டு, தெருவில் கொட்டுகின்றனர். பெங்களூரு போன்ற மாநகரங்களில், பிரபலமான கல்யாண மண்டபங்களில் வாடகை, லட்சக் கணக்கான ரூபாயாக உள்ளது. இரண்டு நாள் திருமண நிகழ்ச்சிக்காக, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படுகிறது.

கடிவாளம்:

இது போன்ற ஆடம்பர திருமணங்களுக்கு, கடிவாளம் போடுவது பற்றி, சட்டசபை, மேலவை கூட்டத்தொடரில் பலமுறை விவாதிக்கப்பட்டும், மசோதா வடிவமைக்கவில்லை. தற்போது செயல்பாட்டில் உள்ள, ஆடம்பர திருமண தடை சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வருவதன் மூலம், புதிய மசோதாவை, அரசு தயாரித்து வருகிறது. தற்போது அமலிலுள்ள சட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து செய்யப்படும் திருமணங்கள், ஆடம்பர திருமணங்களாக கருதப்படும். தற்போது இத்தொகை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஆடம்பர திருமணங்களுக்கு, இரண்டு சதவீதம் வரி விதிக்க வேண்டும் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர். இத்திட்டத்திற்கு, திருமண மண்டப உரிமையாளர்களின் ஒத்துழைப்பும், அவர்களிடமிருந்து, திருமண செலவு விவரங்கள் பெறப்படும். அனைத்து திருமண மண்டபங்களிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது என, அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. கூட்டுத் திருமணம் மற்றும் எளிமையான திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது, அரசின் விருப்பம். எனவே, எத்தனை தடைகள் வந்தாலும், இம்மசோதாவை தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்று, அரசு முடிவெடுத்து உள்ளது.

எளிமையான திருமணங்களை ஊக்கப்படுத்தி, ஆடம்பரங்களுக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது, அரசின் விருப்பம்; இதற்காக சட்டம் வடிவமைக்கப்படுகிறது. சட்டத் துறையிடமிருந்து வந்துள்ள கோரிக்கையில், எங்கள் துறை, சில அம்சங்களை சேர்க்கிறது. மசோதாவை, எப்போது தாக்கல் செய்வது என்று, முதல்வர் தீர்மானிப்பார் என்றார்.
உமாஸ்ரீ,
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர்  தினமலர்.com

கருத்துகள் இல்லை: