சனி, 31 ஜனவரி, 2015

சுனந்தா கொலை தொடர்பாக மகனிடம் விசாரணை: போலீசார் தகவல்

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவரது மகன் ஷிவ் மேனனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி, டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிணமாக கிடந்தார். இதை மர்ம மரணமாக முதலில் பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன் கொலை வழக்காக மாற்றினர். இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஓட்டல் ஊழியர்கள், சசிதரூரின் வேலைக்காரர்கள் உள்ளிட்டோரிடம் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் சசிதரூர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் நளினி சிங் ஆகியோரிடமும் கடந்த சில நாட்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது.


இந்த வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங்கிடம் நேற்று முன்தினம் போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின் போது, ‘சுனந்தாவின் மரணத்துக்கு முன்னதாக தன்னுடன் பேசிய விவகாரங்கள்’ குறித்து போலீசார் கேட்டதாக பின்னர் அமர்சிங் கூறினார்.

இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்சி கூறுகையில், ‘இந்த வழக்கு தொடர்பான சில விஷயங்கள் தனக்கு தெரியும் என அமர்சிங் கூறியிருந்தார். செய்தியாளர்களிடமும் அவர் சில தகவல்களை வெளியிட்டிருந்தார். எனவே அவரிடம் விசாரணை நடத்தினோம்’ என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக அவரது மகன் ஷிவ் மேனனிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து கமிஷனர் பஸ்சியிடம் கேட்டபோது, ‘ஆம், ஷிவ் மேனனிடம் 2 அல்லது 3 நாட்களில் விசாரணை நடத்தக்கூடும். இது தொடர்பாக அவரிடம் பேச உள்ளோம். தேவைப்பட்டால் சசிதரூரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

ஷிவ் மேனன், சுனந்தா புஷ்கரின் முந்தைய திருமணம் மூலம் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: