வெள்ளி, 14 நவம்பர், 2014

சேலம் மாணவி தேஜாஸ்ரீ கொலையில் ஒரு வாலிபர் சிக்கினார்

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கொலையில் வாலிபர் ஒருவர் சிக்கினார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் அழகாபுரத்தை அடுத்த பெரிய புதூர் வன்னியர் நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). இவர் சேலம் சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (38).
இவர்களுக்கு ஹரிணி (20), தேஜாஸ்ரீ (14) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இதில் ஹரிணி பி.இ. முடித்து விட்டு சென்னையில் கடந்த ஒரு ஆண்டாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இரண்டாவது மகள் தேஜாஸ்ரீ அழகாபுரம் விநாயகா வித்யாலயா பள்ளியில் 8–ம் வகுப்பு படித்தார்.
சென்னையில் வேலை பார்க்கும் ஹரிணிக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் அவரது தாயார் சென்னை கிளம்பி சென்று விட்டார். தந்தை வேலைக்கு சென்று இருந்தார்.
நேற்று மாலை 5–30 மணிக்கு பள்ளியில் இருந்து வந்த தேஜாஸ்ரீ டியூசனுக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் புதிய பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று மாணவி தேஜாஸ்ரீயிடம் ஷோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். இரவு 7–10 மணியளவில் அந்த வாலிபர்கள் வேகமாக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மாணவியின் தந்தை துரைராஜ் வந்தார். அவர் வந்து பார்த்த போது மாணவி கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
அவர் உடனடியாக அவசர போலீஸ் எண் 100–க்கு போன் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்சும் வந்தது. அதுவரை மாணவி உயிர் இருந்தது. பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இந்தக் கொலை குறித்து தகவல் கிடைத்ததும் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் பாபு, பிரபாகரன். உதவி கமிஷனர்கள் விவேகானந்தன், ராஜேந்திரன், முருகசாமி, தினகரன், அசோகன், இன்ஸ்பெக்டர்கள் கமலேஷ், வின்சென்ட். குமரேசன் மற்றும் போலீசார் வந்தனர். போலீசார் வீட்டுக்குள் புகுந்து பார்த்த போது பீரோ திறந்து இருந்தது. பீரோவில் இருந்த துணிகள் கலைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நகை–பணம் ஆகியவை அப்படியே இருந்தது.
மாணவி தேஜாஸ்ரீ வைத்து இருந்த ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மட்டும் கொள்ளை போய் இருந்தது. கிட்டத்தட்ட 30 நிமிடம் அந்த வீட்டில் இருந்து கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார். அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் போலீசார் விசாரித்த போது கொலையாளிகள் 2 பேர் என்பது தெரிய வந்தது. 20 முதல் 30 வயதுக்குள் உள்ள அந்த வாலிபர்கள் புதிதாக வாங்கிய பல்சர் பைக்கில் வந்து உள்ளனர். அதில் ஒரு வாலிபர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். இன்னொருவர் மங்கி குல்லா அணிந்து இருந்தார். இவர்களில் மங்கி குல்லா அணிந்த வாலிபர் ஏற்கனவே இந்த வீட்டுக்கு வந்து கொலை செய்யப்பட்ட தேஜாஸ்ரீயின் அக்காள் ஹரிணியுடன் பேசிக் கொண்டு இருப்பதை அந்தப் பகுதி மக்கள் பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் தான் கொலையாளியாக இருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை துரைராஜ் மற்றும் சென்னையில் இருந்து அவசரமாக புறப்பட்டு சேலம் வந்த அவரது தாயார் கஸ்தூரி மற்றம் கொலை நடந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரை தனிப்படை போலீசார் இன்று காலை பிடித்தனர். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது நண்பர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் கொலை செய்யப்பட்ட மாணவி தேஜாஸ்ரீ சென்று வந்த பள்ளி வேன் டிரைவர் மாணவியை அடிக்கடி முறைத்து பார்ப்பாராம். அவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட தேஜாஸ்ரீயின் அக்காள் ஹரிணிக்கு மங்கி குல்லா அணிந்த வாலிபருடன் ஏற்கனவே காதல் இருந்து வந்தாக கூறப்படுகிறது. அந்த வாலிபருடன் அவர் நீண்ட நேரம் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டு இருப்பாராம். இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தவுடன் அவர்கள் மகளை கண்டித்து உள்ளனர். இதனால் காதலை கைவிட்டு ஹரிணி சென்னையில் வேலைக்கு சென்று விட்டார்.
அதன் பிறகு அந்த வாலிபருடன் பேசுவதை அவர் தவிர்த்து விட்டார். என்றாலும் அந்த வாலிபர் அடிக்கடி ஹரிணி வீட்டுக்கு வந்து அவரது தங்கை தேஜாஸ்ரீயிடம் அக்காள் விலாசம் மற்றம் செல்போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அவரும், அவரது நண்பரும் வந்து விலாசம் மற்றம் செல்போன் நம்பர் கேட்டு தகராறு செய்து இருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் மங்கி குல்லா அணிந்த வாலிபர் மாணவியை கொன்று இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறாகள். போலீசாரிடம் பிடிபட்ட வாலிபரிடம் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகளுடன் போராடியதால் மாணவி தேஜாஸ்ரீ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் டாக்டர்கள் மாணவியின் உடலை பார்வையிட்டு அவர் பாலியல் பலாத்காரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டனர். என்றாலும் இன்று பிரேத பரிசோதனையில் தான் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தெரிய வரும். சேலத்தில் 8–ம் வகுப்பு மாணவி நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
இந்த மாணவி சேலம் அத்வைத ஆசிரமம் ரோட்டில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இவர் கொலை செய்யப்பட்டதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் , மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக மாணவி தேஜாஸ்ரீ படித்து வந்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: