சனி, 15 நவம்பர், 2014

தீயாகப் பரவும் Kiss போராட்டம் முத்தம் கொடுப்பதை பெருசுப்படுத்தாதீங்க...

நாங்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எப்படி காதலிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்? ஒழுக்கத்தைப் பற்றி நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை'' என்று மதவாத அமைப்புகளுக்கு எதிராக அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர் கல்லூரி இளைஞர்கள். நாடு முழுவதும் பரவிவரும் 'அன்பின் முத்தம்’ (கிஸ் ஆஃப் லவ்) போராட்டம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளதுடன், கடுமையான எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது!


கேரளாவின் கோழிக்கோட்டில் புறப்பட்ட 'முத்தப் போராட்டம்’ சமூக வலைதளங்கள் வாயிலாக கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி என பல பெருநகரங்களுக்கும் பரவியுள்ளது. ஆர்.எஸ்.எஸ், ஹிந்து சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற  அமைப்புகளுக்கு எதிரான போராட்டமாக இது உருமாறி வருகிறது.
இந்தப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழியிட்டவர் 34 வயதான பர்மிஸ் ஹாஷிம். கோழிக்கோட்டைச் சேர்ந்த பொறியாளர். அவரிடம் பேசினோம். ''சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் ஒரு காதல் ஜோடி முத்தங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தது. இதனை ஊடகம் ஒன்று படம் பிடித்து, கலாசாரச் சீரழிவு நடப்பது போன்ற காட்சிகளாகத் தொகுத்து வெளியிட்டது. அந்த உணவகத்தின் மீது பி.ஜே.பி-யினர் தாக்குதல் நடத்தினர். 'ஒழுக்கம்’ என்ற பெயரில் மதவாத அமைப்பினர் நிகழ்த்தும் அராஜக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. பொது இடங்களில் முத்தம் கொடுப்பது தவறில்லை என்று நீதிமன்றங்களே தீர்ப்பளித்துள்ளன. 2009-ம் ஆண்டு மங்களூரில் உள்ள பப் கூடம் ஒன்றுக்குள் புகுந்து, பெண்களைத் தாக்கி வெளியே விரட்டினார்கள். 2012-ல் அதே மங்களூரில் ரிசார்ட் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கி, துன்புறுத்தி, இழிவு செய்தார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கத்தான், கொச்சியில் முத்தமிடும் போராட்டத்தை நடத்தப் போவதாக என் முகநூலில் அறிவித்திருந்தேன். அது, இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. 'ஃப்ரீ திங்கர்ஸ்’ என்ற அமைப்பு எனக்கு ஆதரவு அளித்தது. கொச்சி மரைன் ட்ரைவில், இந்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டோம். அதற்கு முன்பாகவே எங்களைப் போலீஸார் கைது செய்துவிட்டனர். பொது இடங்களில் முத்தம் கொடுத்துக் கொள்ளலாம் என்பதுக்காக நாங்கள் போராடவில்லை. எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிட முடியாது என்பதை வலியுறுத்தவே இந்தப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். இதற்கு எதிர்ப்புகள் குவியும் அளவுக்கு, இடதுசாரிகள் உட்பட பல தரப்பட்ட மக்கள் மற்றும் இயக்கங்களிடம் இருந்து ஆதரவு பெருகிவருகின்றன. அடுத்த சில தினங்களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதைத் தீவிரமாக எடுத்துச் செல்ல இருக்கிறோம்'' என்றார் அவர்.  
டெல்லி ஜந்தேவாலன் பகுதியிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். போலீஸ் வளையத்தையும் மீறி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை நெருங்கி, முத்தமிடும் போராட்டத்தை நடத்தினர். காதலர்கள், நண்பர்கள், தோழிகள் என அனைத்துத் தரப்பினரும் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டனர். அங்கு பேசிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பங்க்கூரி சாஹிர், ''இரட்டை வேடம் போட மதவாத அமைப்புகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பல இடங்களில், பாலியல் வன்கொடுமைகளுக்குப் பெண்கள் ஆளாகின்றனர். அதை எல்லாம் தட்டிக் கேட்காதவர்கள் முத்தங்களைப் பரிமாறிக்கொள்வதை ஏன் பெரிதுப்படுத்த வேண்டும். தயவுசெய்து முத்தம் கொடுப்பதை பெருசுப்படுத்தாதீங்க...'' என்றார் ஆக்ரோஷமாக.
''நான்கு சுவருக்குள் நடக்க வேண்டிய விஷயத்தை இப்படி வெட்ட வெளிச்சமாகச் செய்வதுதான் நாகரிகமா? நாங்கள் காதலை ஆதரிக்கிறோம். அதற்காக, இந்திய கலாசாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதற்காக ரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம்'' என்று கொந்தளிக்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்.
ராஜஸ்தான் பி.ஜே.பி முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவும் தொழிலதிபர் கிரண் மஜூம்தாரும் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்டபோதும் சர்ச்சை கிளம்பியது.
அன்பை வெளிப்படுத்தும் முத்தத்தில் இத்தனை சர்ச்சைகளா?
- நா.இள.அறவாழி           vikatan.com

கருத்துகள் இல்லை: