செவ்வாய், 11 நவம்பர், 2014

தெற்கு அமைச்சர்களின் தொகை மன்மோகன் அரசில் - 27, மோடி ஆட்சியில் - 8 !

புதுடில்லி:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தென்மாநிலங்களைச் சேர்ந்த, 27 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், தற்போதைய மோடி அரசில், தமிழகம் உட்பட, ஐந்து தென் மாவட்டங்களிலும் சேர்த்து, எட்டுப் பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். அதிலும், கேரளாவைச் சேர்ந்த யாரும், மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், 2வது ஆட்சிக் காலத்தில் (2009-2014), பிரிக்கப்படாத ஆந்திரா, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த, 27 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இவர்களில், 12 பேர் கேபினட் அமைச்சர்கள். மேலும், 27 பேரில், 11 பேர் ஆந்திராவையும், எட்டு பேர் கேரள மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
கேரளாவில் இல்லை:



ஆனால், தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை யில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் சார்பில், கேபினட் அமைச்சர்கள் நான்கு பேரும், இணை அமைச்சர்கள் நான்கு பேரும் இடம் பெற்றுள்ளனர். அதேநேரத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.ஐந்து தென் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், பா.ஜ., ஏற்கனவே ஆட்சியில் இருந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், தற்போது படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால், கேரளா மற்றும் தமிழகத்தில், பா.ஜ., வளர, மாநில கட்சிகள் பெரும் தடையாக உள்ளன.
போதிய பிரதிநிதித்துவம்:


தமிழகத்தில் கூட, லோக்சபா தேர்தலின் போது, தே.மு.தி.க., உட்பட, சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்ததால், ஒரு தொகுதியை பா.ஜ., கைப்பற்றியது. ஆனால், கேரளாவில், பா.ஜ.,வால், இன்னும் தன் கணக்கை துவக்க முடியவில்லை. வரும் தேர்தல்களில், தென்மாநிலங்களில் இருந்து, பா.ஜ., சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே, மத்திய அமைச்சரவையில் போதிய அளவில் பிரதிநிதித்துவம் பெற முடியும்.இல்லையெனில், இந்த நிலையே தொடர வாய்ப்பு உள்ளது.
நிலப்பகுதியில் 20 சதவீதம்:



* நாட்டின் மொத்த நிலப்பரவில், 20 சதவீத பகுதியை, ஐந்து தென்மாநிலங்களும் கொண்டுள்ளன. அத்துடன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில், ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ளன.* சமூக, பொருளாதார மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாட்டில், இந்த ஐந்து தென் மாநிலங்களும் முன்னணியில் உள்ளன.* நாட்டில் உள்ள சிறந்த பொதுத்துறை நிறுவனங்களில் பல, இந்த தென் மாநிலங்களில் தான் உள்ளன.* லோக்சபாவில் தென்மாநில பா.ஜ., - எம்.பி.,க் களின் பலம் குறைவாக இருப்பது, மத்திய அமைச்சரவையிலும் பிரதிபலித்துள்ளது.* முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., முக்கியமான அங்கம் வகித்ததால், அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.* முந்தைய லோக்சபா நிலவரம் போல இல்லாமல், தற்போதைய லோக்சபாவில், பா.ஜ., பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால், எந்த மாநிலங்களில் இருந்து, அந்தக் கட்சி அதிக எம்.பி.,க்கள் தேர்வாகி உள்ளனரோ, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலைமை மோடிக்கு உருவாகி உள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: