சனி, 8 மார்ச், 2014

மலேசிய விமானம் விபத்து: வியட்நாம் கடல் பகுதியில் விமானம் கண்டுபிடிப்பு

239 பேருடன் காணாமல் போன மலேசிய விமானம், வியட்நாமின் தோ சு தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை வியட்நாம் கடற்படை அதிகாரி ஒருவர் அரசு செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், வியட்நாம் கடற்படை கப்பல்கள் அப்பகுதியில் இல்லாததால், அருகில் உள்ள தீவுகளில் இருந்து மீட்பு பணிகளுக்காக படகுகளை கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 777- 200 ரகத்தைச் சேர்ந்த எம்.எச்.370 விமானம் இன்று காலை காணாமல் போனது. விமானத்தில் 12 சிப்பந்திகள், 2 குழந்தைகள் உள்பட 239 பேர் இருந்தனர்.
விமானம் காணாமல் போனது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,"எம்.எச்.370 விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதே நாளில் காலை 6.30 மணிக்கு பீஜிங் விமான நிலையத்திற்கு விமானம் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் அதிகாலை 2.40 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியுள்ளது. விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
150 பேர் சீனர்கள்:
விமானத்தில் இருந்த பயணிகளில் 150 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என அந்நாடு அறிவித்துள்ளது.
மேலும், காணாமல் போன விமானம் சீன வான்வழி போக்குவரத்து மேலாண்மை துறையுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை என சீனாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
வெளியுறவு அமைச்சர் வருத்தம்:
முன்னதாக விமானம் காணவில்லை என்ற செய்தி வெளியானதும், அச்செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆன் தெரிவித்தார். மேலும் வெளியுறவு அமைச்சகமும், விமான போக்குவரத்து துறையும் அவசர கால நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும், விமானம் குறித்த தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். தென் சீன கடல் பகுதியிலும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
வியட்நாமில் விபத்து:
இதற்கிடையில், காணாமல் போனதாக கூறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச்.370 விமானத்தில் இருந்து சிக்னல்கள் பெறப்பட்டதாக வியட்நாம் ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனை சீன ஊடகங்களும் உறுதிப் படுத்தின. இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் விமானம் வியட்நாமின் தோ சு தீவுகள் அருகே விபத்துக்குள்ளானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: