வியாழன், 6 மார்ச், 2014

நடிகையுடன் குடும்பம் நடத்தி மாயமான பி.இ. மாணவர்: பலாத்காரம் செய்த உறவி


நெல்லை: குரூப் டானஸ்ர் ஒருவரை பி.இ. மாணவர் ஒருவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரை தேடி வந்த டான்ஸரை மாணவரின் உறவினர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். சென்னை மாதவரம் வி.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் அபிராமி(23). பல்வேறு படங்களில் குரூப் டான்ஸராக பணியாற்றியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் அவர் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நடனம் ஆட இளம்பெண்களுடன் சேர்ந்து வந்தார். அந்த திருவிழாவில் உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்த பல் டாக்டர் முத்துலிங்கம் என்பவரின் மகன் முத்துகுமரன் அபிராமியுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். முத்துகுமரன் பி.இ. நான்காம் ஆண்டு படித்து வருகிறார். திருவிழா முடிந்த பிறகு அவரும், அபராமியும் செல்போன் மூலம் காதலை வளர்த்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்த முத்துகுமரனை அபிராமியை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தனது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று முத்துகுமரன் தெரிவித்தார். பின்னர் அவர் அபிராமியை சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இந்நிலையில் முத்துலிங்கம் தனது மகனை காணாமல் தேடியபோது அவர் சென்னையில் குரூப் டான்ஸருடன் குடும்பம் நடத்துவது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மகனை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு கூறினார். முத்துகுமரனும் தந்தை அழைத்தவுடன் மனைவியிடம் கூறாமல் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அபிராமி தன்னிடம் இருந்த மாமனாரின் செல்போனுக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் முத்துலிங்கமோ இணைப்பை துண்டித்துவிட்டார். பொறுத்துப் பார்த்த அபிராமி தனது கணவனை சந்திக்க நினைத்து நேற்று காலை நெல்லை புதிய பேருந்து நிலையம் வந்தார். அப்போது அவர் மாமனாரை தொடர்பு கொண்டு தான் நெல்லை வந்துவிட்ட விவரத்தை தெரிவித்ததோடு உடன்குடிக்கு வருவதாகவும் கூறினார். அதற்கு முத்துலிங்கம் நீ முகவரியை தேடி அலைந்து வர வேண்டாம் நானே வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என்றார். அதன்படி அவர் உறவினர்கள் 3 பேருடன் நெல்லை பேருந்து நிலையம் வந்தார். அபிராமியை காரில் அழைத்துக் கொண்டு அவர்கள் சென்றனர். உடன்குடி அருகே உள்ள ஆள் இல்லாத வீட்டுக்கு அபிராமியை அழைத்துச் சென்று முத்துகுமரனை மறந்துவிடுமாறு மிரட்டியுள்ளனர். அவர் மறுக்கவே முத்துலிங்கம், தனது உறவினர் ஒருவருடன் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து அங்கிருந்த 2 வாலிபர்கள் அபிராமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பிறகு அவரை கார் மூலம் அழைத்துச் சென்று பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். காட்டில் அழுது கொண்டே நின்ற அபிராமியை கிராம மக்கள் பாளை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் நடந்தவற்றை தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் முத்துலிங்கம், அவரது மகன் மற்றும் உறவினர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முத்துலிங்கத்தை கைது செய்த போலீசார் மீதமுள்ளவர்களை தேடி வருகிறார்கள்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: