டி.சி.எஸ் அலுவலகக் கட்டிடம்சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி (24) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அலுவலகத்திலிருந்து திரும்பாததால், அவருடன் தங்கியிருந்த தோழிகள் டி.சி.எஸ்சுக்கும்,  சேலம் ஆத்தூரில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை வந்த உமா மகேஸ்வரியின் தந்தை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
டி.சி.எஸ் கட்டிடம்
13-ம் தேதி இரவு 10.30 மணிக்கு டி.சி.எஸ் அலுவலகத்திலிருந்து வெளியேறிய காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த சனியன்று டி.சி.எஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் உள்ள புதர்களில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக (22-2-2014) பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இந்த சம்பவம் குறித்து சிறுசேரி டி.சி.எஸ் ஊழியர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைக்கின்றன. “சனிக்கிழமையன்று உடலை கண்டெடுத்ததாக டி.சி.எஸ் நிர்வாகமும் போலீசும் கூறுவது முழுப் பொய். வெள்ளிக்கிழமையே சிப்காட் வளாகத்தில் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் மத்தியில் செய்தி பரவியது. ஏன் தேதியை மாற்றிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர். சிலர் தங்களுக்கு வியாழக்கிழமையே இந்த தகவல் தெரியும் என்று அதிர்ச்சியளித்தார்கள். இவர்களது கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக,  தினகரன் மற்றும் மாலைமுரசு நாளிதழ்கள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்கள் மத்தியிலும், செய்தியாளர்கள் மத்தியிலும் இந்தத் தகவல் பரவியதாகவும்,  போலீசாரை தொடர்பு கொண்ட போது அவர்கள் மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளன. உமா மகேஸ்வரி கொலை

இதன் மூலம் நிர்வாகமும், போலீசாரும் இந்த விசயத்தை மூடி மறைக்க முயன்று செய்தி வெளியே கசிந்ததும் வேறு வழியின்றி சனிக்கிழமையன்று உடலை கைப்பற்றியது போல நாடகமாடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இந்த சம்பவத்திற்கான தனது பொறுப்பை கைகழுவி விடவும், டாடா நிறுவனம் குறித்து ஏற்றி போற்றி கூறப்படும் மதிப்பீடுகள் பாதிக்கப்பட்டு தங்கள் பிராண்ட் இமேஜ் சரியும் என்பதாலும் டி.சி.எஸ் நிர்வாகம் இதை மூடி மறைக்க முயற்சி செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இது அவர்களின் வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான். சில மாதங்களுக்கு முன்னர் துரைப்பாக்கம் சென்னை ஒன் அலுவலக வாசலில் நடந்த விபத்தில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், புதிய ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் நடக்கும் காரப்பாக்கம் அலுவலகத்தில் ஒரு ஊழியர் நெஞ்சு வலியால் மருத்துவ உதவியின்றி அங்கேயே இறந்ததாகவும் கூறும் ஊழியர்கள், அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகாமலும்,  பக்கத்து அறையில் வேலை செய்பவருக்கோ கூட தெரியாமலும் பார்த்து கொண்டதை கூறி இதுதான் நிறுவனத்தின் வழக்கம் என்று கூறுகிறார்கள்.
சிறுசேரி சிப்காட்
சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா
அமெரிக்காவில் 2008-க்குப் பிறகு ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து, இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக குறைக்கப்பட்டு சுரண்டலும், கொத்தடிமை முறையும் அதிகமாகி வருகிறது. லாப வளர்ச்சியை பராமரித்துக் கொள்ளும் விதமாக நிறுவனத்தின் செலவில் போக்குவரத்து வசதி, இலவச காஃபி, இளைப்பாறும் அறைகள், உடற்பயிற்சி அறைகள் போன்று ஏற்கனவே அளிக்கப்பட்ட வசதிகள் அனைத்தும் கேள்விக்கிடமின்றி வெட்டப்பட்டன. ஊதிய உயர்வுகளும், ஊக்கத் தொகைகளும் மறுக்கப்பட்டு வந்தன.
இந்த வசதிகளெல்லாம் நிறுவனம் தந்தே ஆக வேண்டிய உரிமைகள் என்று தொழிலாளி வர்க்கம் ஓரளவு சாதித்திருப்பதைப் போன்ற சூழல் ஐ.டி துறையில் இல்லை. அங்கே பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இதை சலுகையாக பார்க்கின்றனரே அன்றி உரிமையாக இல்லை. மேலும் அனைத்து ஐ.டி நிறுவனங்களும் ஊழியர்களை கவரவும், அவர்களை நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வைக்கவுமே இந்த உரிமைகளை ஏதோ தானம் தர்மம் செய்வது போல ஆரம்பத்தில் கொடுத்தன. பின்னர் ஐ.டி துறையில் வேலை வாய்ப்பு குறைந்த பின்னர் ஈவிரக்கமின்றி அந்த உரிமைகளை வெட்டின.
தமது செலவுக் குறைப்பு நடவடிக்கையால் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இருட்டடிப்பு செய்து தமது இமேஜை பராமரிப்பதில் டி.சி.எஸ் போன்ற தரகு முதலாளி நிறுவனங்கள் மிகவும் கவனமாக இருக்கின்றன.
மேலும் உமாமகேஸ்வரி விசயத்தில் மூடி மறைக்க கூடுதலான சில காரணங்களும் இருக்கலாம் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிதாக வேலைக்கு வருபவர்கள் தகுந்த வாடிக்கையாளர் ஒப்பந்த பணியில் (புராஜெக்ட்) சேர்க்கப்படும் வரை அவர்களை காத்திருப்போர் பட்டியலில்( பெஞ்ச்) வைத்திருப்பது வழக்கம்.  அந்த காலகட்டத்தில் அவர்கள் பகல் ஷிப்டில் மட்டும் வேலை செய்வதால் வழக்கமான நிறுவன பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புராஜக்டில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டால் பணிக்கான அடையாள எண்  வழங்கப்பட்டு, அவர்களுக்குரிய செலவுகள் அந்த குறிப்பிட்ட எண்ணின் கீழ் வரவு வைக்கப்படும். அதாவது, பணி எண் வழங்கப்பட்டு இருந்தால்தான் குறிப்பிட்ட ஊழியருக்கு இரவு நேர சிறப்பு போக்குவரத்து முதலான வசதிகளும் செலவுகளும் செய்யப்படும். எனவே, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை இரவுப் பணிகளில் பயன்படுத்த முடியாது. இது நிரந்தர தொழிலாளிகளுக்கு கொடுத்தே ஆக வேண்டிய உரிமைகளை மறுப்பதற்கு ஒப்பந்த தொழிலாளிகள் என்றால் கிடையாது என்று பல நிறுவனங்கள் வைத்திருக்கும் சதித்திட்டத்திற்கு ஒப்பானதாகும்.
சமீப ஆண்டுகளில் லாப வீதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து புதிதாக வேலைக்கு சேரும் ஊழியர்களை பணி எண் கொடுக்காமல்,  வாடிக்கையாளர் புராஜக்டில் ஈடுபடுத்தும் பழக்கம் ஆரம்பமானது. அதாவது அந்த ஊழியர் அதிகாரபூர்வமாக வாடிக்கையாளர் பணியில் இருக்க மாட்டார், ஆனால் அதற்கான வேலைகளை செய்வார். ஒரு அனுபவம் வாய்ந்தவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் இரண்டு மூன்று புதியவர்களை பணியில் ஈடுபடுத்துகிறார்கள். இவர்களை நிழல் ஊழியர்கள் (Shadow resourse) என்று அழைக்கிறார்கள்.
உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி
ஏற்கனவே பார்த்தபடி, புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், அந்தப் பணிக்குத் தேவைப்படும் இரவு நேர வேலைகளை முடித்து விட்டு நிறுவனம் ஏற்பாடு செய்யும் கார் வசதி  உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது. 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். மிகவும் தாமதமானால் மட்டுமே மற்ற முறையான ஊழியர்கள் எடுக்கும் வாடகைக் கார் வசதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஆரம்ப ஊழியர்களில் (fresher ) ஒருவர் தான் உமா மகேஸ்வரி.
இவர் நார்தன் டிரஸ்ட்( Northern Trust) என்ற வாடிக்கையாளருக்கான பணியில் நிழல் ஊழியராக வேலை வாங்கப்பட்டிருக்கிறார்.  மேலும் சமீபத்தில்,  வாடகைக் கார் வசதி கோருவதற்கான நடைமுறை சிக்கல் நிறைந்ததாக மாற்றப்பட்டிருக்கிறது.  இதனால் வீட்டுக்குப் போக வாகன வசதி கிடைக்கப் பெறாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில்தான் 13-ம் தேதி இரவு அலுவலகத்திலிருந்து இரவு 10.30 க்கு கிளம்பியவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணின் உடல் என்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பது முதல் நிர்வாகம், போலீஸ், பத்திரிகைகளால் கூறப்படும் அனைத்து தகவல்களும் முரண்பாடு நிறைந்ததாக உள்ளன.
இரவு 11 மணிக்கு வீட்டுக்குச் செல்ல நிறுவனத்தின் சார்பில் அந்த பெண்ணிற்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்திருந்ததாகவும், ஆனால் கொலையுண்டதற்கு முந்தைய இரண்டு வாரங்களாக அந்த வசதி வேண்டாம் என்று கூறிவிட்டு இரவு 10 மணிக்கே ஆளில்லாத சாலையில் நடந்து பழைய மகாபலிபுரம் சாலைக்கு வந்து பேருந்தில் வீட்டுக்குச் சென்றதாகவும் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிற்பகலில் அப்படி வேலைக்கு வரும் போது வழியில் வேலை செய்யும் வட இந்திய கட்டிட ஊழியர்கள் தொடர்ந்து இவரை கிண்டல் செய்ததாகவும்,  அதனால் அவர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை இந்த பெண் அடித்ததாகவும்,  அதனால் அவர்கள் சம்பவத்தன்று தனியாக நடந்து செல்லும் போது பழிவாங்கியதாகவும் அந்த செய்தி சொல்கிறது.
அதாவது, 2 மணி ஷிப்டுக்கு வரும் போதும் போக்குவரத்து வசதி இல்லை, அதனால் வழியில் தொந்தரவில் மாட்டியிருக்கிறார். அப்படியிருந்தும் இரவில் நிறுவனம் ஏற்பாடு செய்த போக்குவரத்தை மறுத்து தனியாக நடந்து சென்றிருக்கிறார். அவருக்காக காத்திருந்த வட மாநில ஊழியர்கள் அவரை தாக்கியிருக்கின்றனர்.
தினமலரில் வெளியான செய்தியில்
போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை
“குற்றவாளிகள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:கடந்த, 13ம் தேதி இரவு 10:00 மணிக்கு, ‘சிப்காட்’ வளாகத்தில், உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து பணத்தை  கொள்ளையடிப்பதற்காக, நாங்கள் அவரை வழிமறித்தோம்.
அவர் எங்கள் நோக்கத்தை தெரிந்து கொண்டு, காலில் இருந்த செருப்பை கழற்றி, எங்களை அடித்தார். அதனால் நாங்கள் ஆத்திரம் அடைந்தோம்.அவரை குண்டுக்கட்டாக தூக்கி முட்புதருக்குள் சென்றோம். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். அவரது கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தி கொன்று விட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க எரித்து கொன்றோம். அவரிடம் இருந்து அலைபேசி, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பறித்து தப்பினோம்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது, அழுகிய நிலையில் காணப்பட்டது  என்றும் முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்பு 25-ம் தேதி அன்றிரவு அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற  நபர்களை விசாரித்து வருவதாக தினகரன் செய்தி வெளியிட்டிருக்கிறது.  மேலும், பிணம் கிடந்ததாகக் கூறப்படும் இடம் தினமும் நூற்றுக்கணக்கான நபர்கள் நடந்து செல்லும் பாதையில் உள்ளது. ஒன்பது நாட்களாக உயிரற்ற உடல் அங்கு கிடந்தால் அழுகி நாற்றமெடுத்திருக்கும். அதை யாரும் கவனிக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை.
இந்த செய்திகள் இவ்வளவு முரண்பாடுகளோடு வெளிவருவதற்கு காரணம் என்ன? ஊடகங்கள் பொதுவில் கிசுகிசு ஆர்வத்தையும், பரபரப்பு மனநிலைக்கு தீனி போடவும் இப்படி செய்திகளை ஊதிப்பெருக்கி எழுதும்தான். ஆனால் இங்கே அதை விட இந்தக் கொலையை மறைப்பதற்கு அல்லது பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் இருப்பது என்று பெரும் முயற்சிகள் நடந்திருப்பதுதான் காரணம். உமா மகேஸ்வரி கொலையுண்டதை விட நிறுவனத்தின் பெயரைக் காப்பாற்றுவதே பிரதானமாக உள்ளது. இது குறித்து ஆரம்பத்தில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது அப்படி ஒன்றுமே இல்லையே, உங்களுக்கு எப்படி தெரியும் என்பதே அவர்களின் எதிர்வினையாக இருந்தது.
ஊடகங்கள், ஆளில்லா விமான சோதனை, சிபிசிஐடி விசாரிப்பு என பரபரப்பு தகவல்களைத் தாண்டி இந்த கொலைக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது குறித்து பேச மறுக்கின்றன. இதை வெறும் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை என்ற பிரச்சனையாக மட்டுமே குறுக்குகின்றன.  ஊழியர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான டி.சி.எஸ் நிர்வாகத்தின் மீது யாரும் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்.
வட இந்திய தொழிலாளர்கள்
கைது செய்யப்பட்ட மேற்கு வங்கத் தொழிலாளர்கள்
கொலை யாரால், எப்போது, எதனால் செய்யப்பட்டது என்பது மட்டுமல்ல இங்கு பிரச்சினை? தங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வரும் ஊழியர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு நிர்வாகத்திற்கு இருக்கிறதா இல்லையா? டி.சி.எஸ் நிர்வாகம் தான் இந்த கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் மையமான பிரச்சனை. பல்வேறு ஊர்களிலிருந்தும் தமது பணிக்கு எடுத்து, பெருநகரங்களில் தங்க வைக்கும் நிறுவனங்கள், சிறுசேரி போன்ற ஒதுங்கிய இடங்களுக்கு வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய முறையான தங்குமிடம் (quarters),  உணவு, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை படிப்படியாக கைகழுவியிருக்கின்றன.
இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், சமூகத்தில் பெண்கள் சந்தித்து வரும் பாதுகாப்பு குறைபாடுகளை நினைவூட்டுவதாகவும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக வேலை செய்வதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டு தன் பொறுப்பை அயோக்கியத்தனமாக கைகழுவியிருக்கிறது டிசிஎஸ்.
இதை கண்டிக்கவோ,  இதுகுறித்து முணுமுணுக்கவோ உரிமையில்லாமல், இன்னும் சொல்லப் போனால் இப்படி கண்டிப்பது தவறு என்று கருதும் மனநிலையில் தான் பெரும்பாலான ஐ.டி துறை ஊழியர்கள் இருக்கிறார்கள். பக்கத்து கேபினில் கொலை நடந்தால் கூட யாருக்கும் தெரிவதில்லை அல்லது தெரிந்தது போல காட்டிக் கொள்வதில்லை.  அடுத்தவரின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள விடாமல் தனித்தனி இயந்திரங்களாக திட்டமிட்டு பிரித்து வைக்கப்பட்டுள்ளார்கள் ஐ.டி துறை ஊழியர்கள். அப்ரைசல், ரேட்டிங் என்ற பெயரில் தன் அருகில் இருபவரையே போட்டியாளராக காட்டி அனைவரையும் ஒன்று சேரவிடாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் டி.சி.எஸ், சி.டி.எஸ் உள்ளிட்ட எல்லா ஐ.டி முதலாளிகளும்,  நாஸ்காம் என்ற பெயரில் சங்கமாக ஒன்றிணைந்து ஊழியர்களை சுரண்டுவதில் பரஸ்பரம் ஒத்துழைக்கிறார்கள்.  தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் தொழிலாளர் நலச்சட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள்,  ஊழியர்களுக்கு விரோதமாக எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று வினவில் ஏற்கனவே செய்தி வந்திருக்கிறது.
ஆனால் முதலாளிகளும், அவர்களின் ஊடகங்களும் தான் தொழிற்சங்கம் வைப்பதையோ, உரிமைகளுக்காக போராடுவதையோ ஏதோ தீண்டத்தகாத செயல் போல பார்க்க ஊழியர்களை பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.
ஐ.டி துறை ஊழியர்களே, உமா மகேஸ்வரியின் கொலை குறித்து நிச்சயம் நீங்கள் வருந்தியிருப்பீர்கள். இப்படி கொலை செய்யப்பட்டுவிட்டாரே என்று உங்கள் சக ஊழியர்களும் வருந்தியிருப்பார்கள்.  ஆனால் முதலாளிகளின் வருத்தம் வேறுமாதிரி இருந்திருக்கும், ஊடகங்களில் செய்தி வந்து விட்டதே என்பதே அவர்களது கருணையின் பின்னணி. இந்நேரத்திற்கு அனைத்து நிறுவன எச்.ஆர் களும் மீடியாவை கையாண்டதில் என்ன தவறு என தங்களுக்குள் பேசி இருப்பார்கள். நாஸ்காமில் விவாதித்திருப்பார்கள். அதாவது உமா மகேஸ்வரிகளை காப்பாற்றவதை விட தமது நிறுவனத்தின் மதிப்பை காப்பாற்றுவதுதான் அவர்களது தலையாய பிரச்சினை.
உமா மகேஸ்வரி கொலைக்கு பின்னர் டாடா நிறுவனம் அனுப்பியிருக்கும் ஊழியர்களுக்கான கடிதம் குறித்து டிசிஎஸ் ஊழியர்கள் தெரிவித்தார்கள். அந்த கடிதத்தில், “சென்னையிலும், மும்பையிலும் இரண்டு ஊழியர்களை இழந்து விட்டோம். சமூகம் இப்படித்தான் இருக்கும், நாம்தான் பாதுகாப்பாக, கவனமாக இருக்க வேண்டும், நிறுவனத்தின் போக்குவரத்து ஏற்பாடுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள், இறந்து போன ஊழியர்களது குடும்பத்தின் வேதனையில் டாடா பங்கு கொள்கிறது” என்று டாடா நிறுவனம் தந்திரமாக பேசி தப்பித்துக் கொள்கிறது.
டி.சி.எஸ் சிறுசேரி கட்டிடம்
டி.சி.எஸ் சிறுசேரி கட்டிடம்
இனிமேல் அனைத்து பிரிவு ஊழியர்கள் குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் நிழல் ஊழியர்களாக இருந்தாலும் சரி, நிரந்தர ஊழியர்களாக இருந்தாலும் சரி இரவில் பாதுகாப்புடன் கூடிய வாகன வசதி உண்டு என்று டாடா உறுதி அளிக்கவில்லை. மாறாக அவரவர் பாதுகாப்பை அவரவர் ஏற்க வேண்டும் என்று பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்கிறது. இலாபமா, ஊழியர் நலனா என்று கேட்டால் டாடா மட்டுமல்ல அனைத்து முதலாளிகளும் இலாபமே துணை என்றே முழங்குவார்கள்.
இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள்தான் குற்றவாளிகள் என்று போலீஸ் கூறுகிறது. அது உண்மையெனில் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு காவல் நிலையம் தீவிரமாக சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுகிறது என்று காட்டுவதற்கு ஒரு மாதத்தில் இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனும் தமிழக காவல் துறையின் கடமை வேட்கை குறித்த சந்தேகமும் எழாமல் இல்லை. கூடுதலாக டாடா நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை டாடாவுக்கு மட்டுமல்ல, தமிழக அரசுக்கும் இருக்கிறது என்பதே உண்மை.
எது எப்படியோ சில கிரிமனல்கள் வசம் உமா மகேஸ்வரி சிக்கி இளம் வயதிலையே தனது கனவுகளையும், வாழ்வையும் பறிகொடுத்த பரிதாபத்திற்கு டாடா நிறுவனமே முக்கியமாக பொறுப்பேற்க வேண்டும். உதவித் தொகை கொடுக்கும் தமிழக அரசு, ஐ.டி நிறுவனங்கள் தமது பெண் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் செய்யத் தவறியிருக்கும் கடமைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிமினல்களை கண்டுபிடிக்க சிபிசிஐடி போட்டு வேலை செய்யும் தமிழக அரசு, ஐடி நிறுவனங்களை அப்படி விசாரிப்பதற்கு நாம்தான் போராட வேண்டும். மேலும் இனி அனைத்து ஐ.டி நிறுவனங்களும் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்படவேண்டுமென்றும் நாம் போராட வேண்டும்.
உமா மகேஸ்வரியின் இழப்பிலிருந்தாவது ஐடி துறை ஊழியர்கள் தமது பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சுயமரியாதையை பெறுவதற்கு தொழிற்சங்கம் வேண்டும், அதுவும் முதலாளிகளின் தயவில் இருக்கும் அடிமை தொழிற்சங்கமாக இல்லாமல் புரட்சிகர அமைப்புகளின் துணையோடு இருக்கும் போர்க்குணமிக்க தொழிற்சங்கமாக இருக்க வேண்டும் என்ற உறுதியைப் பெற வேண்டும்.
-    வினவு செய்தியாளர்கள்.