வெள்ளி, 8 நவம்பர், 2013

சிபிஐ சட்டவிரோத அமைப்பு, வழக்குகளை விசாரிக்க முடியாது - குவஹாத்தி உயர்நீதிமன்றம்

குவஹாத்தி: சிபிஐ ஒரு அரசியல் சட்டவிரோதமான அமைப்பு. எனவே அது குற்ற வழக்குகளை விசாரிக்க முடியாது என்று குவஹாத்தி உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை அளித்துள்ளது.
இந்த உத்தரவால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட அது முடிவு செய்துள்ளது.
அரசியல் சட்டத்தின் கீழ் சிபிஐ அமைப்பு செயல்படவில்லை. எனவே அது குற்ற வழக்குகளை விசாரிக்க முடியாது என்பது குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கருத்தாகும்.
ஏற்கனவே சிபிஐக்கு போதிய சுதந்திரம் இல்லை. மத்திய அரசு அதைக் கட்டுப்படுத்துகிறது என்று சர்ச்சை உள்ளது. உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. இந்த நிலையில் சிபிஐ அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று குவஹாத்தி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக குவஹாத்தி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், சிபிஐயானது குற்ற வழக்குகளைப் பதிவு செய்யவோ, விசாரணை நடத்தவோ, குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவோ அருகதையற்றது என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. அதை போலீஸ் அமைப்பு போல கருத முடியாது என்றும் அது தெரிவித்துள்ளது.
1963ம் ஆண்டு சிபிஐயை மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவின் மூலம் உருவாக்கியது. அந்த உத்தரவு செல்லாது என்றும் குவஹாத்தி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இதற்கு அது கூறும் காரணம்- இந்த உத்தரவை குடியரசுத் தலைவரிடம் அனுப்பி அவரது அனுமதியை, ஒப்புதலை மத்திய அரசு பெறவில்லை. மேலும் இதை சட்டப்பூர்வமாகவும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
டெல்லி போலீஸ் சிறப்புச் சட்டத்தின் மூலம்தான் சிபிஐ உருவாக்கப்பட்டது. ஆனால் காவல்துறையின் ஒரு அங்கம் போல சிபிஐ செயல்படவில்லை என்றும் குவஹாத்தி உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: