வெள்ளி, 8 நவம்பர், 2013

மோனோ ரயில் திட்டம் என்னவாச்சு ? மெட்ரோ ரயில் திட்டத்திற்கு யார் காரணகர்த்தா?

சென்னை: 'மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தாங்கள் காரணகர்த்தா என்பதை போல, பெருமை தேடிக்கொள்ள முயற்சிக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்துள்ளார். அங்கே அவர் பேசவில்லை என்றாலும், அந்த திட்டத்தை பற்றிய குறிப்பு, அரசினால் தரப்பட்டுள்ளது. அதில் அந்த திட்டத்தை பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்ட போதிலும், கவனமாக, அது எந்த ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது என்பதை மறைத்து விட்டனர். அந்த திட்டம் தி.மு.க., ஆட்சியில, நான் முதல்வராக இருந்த போது துவக்கப்பட்ட திட்டம். "மெட்ரோ ரயில் திட்டத்தை ஏற்கக் கூடாது' என, முதல்வர் ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அறிவிக்கப்பட்ட போட்டித் திட்டம், மோனோ ரயில் திட்டம். இரண்டரை ஆண்டு காலமாக, இன்னமும் அந்த திட்டம் ஒப்பந்த புள்ளிகளை பரிசீலிக்கும் நிலையில் தான் உள்ளது.


"மோனோ ரயில் திட்டத்தை விட மெட்ரோ ரயில் திட்டம் தான் சிறந்தது' என, ஆதாரங்களோடு மத்திய அதிகாரி ஸ்ரீதரன் போன்ற வல்லுனர்கள் எல்லாம் இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிக்கையாக விடுத்தும் கூட, ஜெயலலிதா, அப்போது அதை கேட்கவில்லை. "மெட்ரோ ரயில் செலவு குறைவு; மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடும் போது, மோனோ ரயில் திட்டத்திற்கான செலவு, 50 சதவீதம் அதிகம்' என, அனுபவத்தின் அடிப்படையில், ஸ்ரீதரன் தெரிவித்த கருத்தை அ.தி.மு.க., அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. சேது சமுத்திர திட்டத்தையும், மதுரவாயல் துறைமுகம் மேம்பால சாலைத் திட்டத்தையும் முடக்கி வைத்திருப்பதைப் போல, மெட்ரோ ரயில் திட்டத்தின் சோதனை ஓட்டத்தைத் துவங்கி வைத்து, தாங்கள் தான் அந்த திட்டத்திற்கு காரணகர்த்தா என்பதைப் போல பெருமை தேடிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.ஆனால், தமிழக மக்களுக்கு, மெட்ரோ ரயில் திட்டம், யாருடைய ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டது என்ற உண்மையும், யார் அந்த மெட்ரோ ரயில் திட்டத்தை மறுத்து, கருத்து வெளியிட்டார் என்ற உண்மையும், நன்றாகவே தெரியும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: