சனி, 5 மே, 2012

முக்கிய துப்பு கிடைத்தது ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும்

முக்கிய துப்பு கிடைத்தது :  மீண்டும் சூடு பிடித்த
ராமஜெயம் கொலை வழக்குமுன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 40 நாட்களாக நடந்த விசாரணையில் தற்போது கொலையாளிகள் பற்றி போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர் ஒருவர் கூலிப்படை மூலம் ராமஜெயத்தை தீர்த்து கட்டியிருப்பது தெரிய வந்தது உள்ளது. இந்த கூலிப்படைக்கு திருச்சி மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடிகள் சிலர் உதவியிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. 
கடந்த சில நாட்களாக போலீசார் ஜாமீனில் விடுதலையான முக்கிய ரவுடிகள் பலரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்தனர். அப்போது செல்போன்கள் மூலம் திருச்சி சிறையில் உள்ள ரவுடிகள் பலர் வெளியில் உள்ள ரவுடி நண்பர்கள் மூலம் பல காரியங்களை நடத்தி வருவதை போலீசார் கண்டு பிடித்தனர். சமீபத்தில் திருச்சி சிறையில் இருந்த நெம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தரபாண்டியன் குண்டாஸ் தண்டனை முடிந்து விடுதலையானது தெரிய வந்தது. அவரை பிடித்து ராமஜெயம் கொலையில் ஈடுபட்ட கூலிப்படை குறித்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக சுந்தரபாண்டியனை போலீசார் தேடினர். 

இந்த நிலையில் சுந்தர பாண்டியனை போலீசார் மடக்கினர். அவரிடம் ராமஜெயம் கொலை தொடர்பாக துருவி, துருவி விசாரணை நடத்தினர். ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படை, செல்போனில் அவரது மனைவி லதா கேர் கல்லூரி ஊழியர், குளித்தலை பெண் உறவினர் ஆகியோரிடம் கட்டை குரலில் பேசியது, அந்த குரல்கள் எந்த ரவுடிகளுக்கு சொந்தமானது என சுந்தரபாண்டியனிடம் போட்டு காட்டி விசாரணை நடத்தப்பட்டது.

இதில் செல்போன் பேச்சு, கூலிப்படை பற்றி சில தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு சுந்தரபாண்டியனை போலீசார் மீண்டும் ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். எடமலைப்பட்டிபுதுரில் லோடு ஆட்டோ டிரைவர் ஸ்டீபன் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக சுந்தரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 சுந்தரபாண்டியன் இதற்கு முன்பு எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ்.நகரில் வசித்தது குறிப்பிடத்தக்கது.   ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட சுந்தர பாண்டியன், முட்டை ரவி கோஷ்டியை சேர்ந்தவர் ஆவார்.

சுந்தரபாண்டியன் மீது புல்லட் மனோகர் கொலை வழக்கு உள்ளது. புல்லட் மனோகர் கொலை ராமஜெயம் கொலை போல நடந்தது. இரவு மதுக்கடை பாரை மூடிவிட்டு சென்ற புல்லட் மனோகரை கடத்தி கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலையை போலவே இதுநடந்துள்ளதால் சுந்தரபாண்டியனை தனிப்படை போலீசார் துருவி, துருவி விசாரித்ததாக கூறப்படுகிறது. 

திருச்சி, சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் சிலருடன் சுந்தர பாண்டியன் தொடர்பு வைத்திருந்தார், கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய பிறகு போலீஸ் கண்ணில் படாமல் இருக்க மாணவர்களுடன் சென்று தங்கிக்கொள்வாராம். ஏற்கனவே தனிப்படை போலீசார் சேலம், ஆத்தூரில் ஒரு கல்லூரி மாணவனை இதன் அடிப்படையில் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

மாணவர், ரவுடிகள் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் ராமஜெயம் கொலையில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த கும்பல் பற்றி போலீசுக்கு முக்கிய துப்பு கிடைத்து உள்ளது. இதனால் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை: