ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

தி.மு.க. பிரமுகர் அயூப்கான் சிறுமியை நரபலி கொடுத்ததாக

மதுரை வாடிப்பட்டி அருகே சிறுமியை நரபலி கொடுத்ததாக 3 பேர் 16 மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் என்ன?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தொத்தன். இவரது 2 குழந்தைகளில் இளைய மகள் ராஜலட்சுமி. வயது 5. கச்சைகட்டி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். திடீரென சிறுமி ராஜலட்சுமி 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி காணாமல் போனார். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீரணன் என்பவரது மாட்டுத் தொழுவத்தில் ராஜலட்சுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சிறுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மலபார் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மலபார் நாக்கை அறுத்துக் கொண்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதைத் தொடர்ந்து அவரது தந்தை மகாமுனியை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் உடல்நலக் குறைவால் மதுரை சிறையில் மரணம்டைந்தார்.

இதனால் மனமுடைந்த மலபார் மதுரை மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் உயிர்தப்பிய நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார். சில நாட்களில் சிகிச்சை பலனின்றி அவரும் மரணமடைந்தார்.

சிறுமியின் மர்ம மரணம், அடுத்தடுத்த மரணங்கள் ஆகியவற்றால் இந்த வழக்கு மர்மங்களை உள்ளடக்கியது என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி ராஜலட்சுமி நரபலி கொடுக்கப்பட்டதாகவும் தெரியவந்ததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய விசாரணையில் கச்சைகட்டியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அயூப்கான், முருகேசன், பொன்னுசாமி ஆகியோர் சிறுமியை நரபலி கொடுத்ததாக கைது செய்துள்ளனர்.

வாளியில் குழந்தையின் ரத்தம்

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள அயூப்கான், தனிச்சியம் என்ற கிராமத்தில் மகளிர் கல்வியியல் கல்லூரிக்காக கட்டிடம் ஒன்றை கட்டிவந்திருக்கிறார். கட்டுமானப் பணியில் தொய்வு இருந்ததால் குழந்தை ஒன்றை நரபலி கொடுக்க முடிவு செய்தார். இதனால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கச்சைகட்டி கிராமத்தைச் சேர்ந்த மலபார், பொன்னுச்சாமி, முருகேசனைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்தே மலபாரும் பொன்னுச்சாமியும் சிறுமி ராஜலட்சுமியைக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் அதிகாலை நேரத்தில் மலபார் என்பவர் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை சில்வர் தூக்குவாளியில் பிடித்துக் கொண்டார். சிறுமி துடிதுடித்து இறந்துவிட்டாள். பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை கொண்டு போய், வீரணன் என்பவரின் மாட்டுத்தொழுவத்தில் போட்டனர். ரத்தத்தை அயூப்கானிடம் கொடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் ரத்தத்தை கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் அயூப்கான் தெளித்துள்ளார். அத்துடன் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு லட்சக்கணக்கில் பணமும் கொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் தலைமறைவான மலபாரின் மனைவி லட்சுமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காட்டிக் கொடுத்த கொலுசு

மிகவும் கச்சிதமாக கொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமி வழக்கில் போலீசாருக்கு தொடக்கத்தில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. சிறுமி ராஜலட்சுமியின் காலில் இருந்த கொலுசுகள் பற்றி போலீஸுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி நகைக் கடைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் அடகுக் கடை ஒன்றில் கொலுசுகள் அடகு வைக்கப்பட்டிருப்பதும் அதை கச்சைகட்டியைச் சேர்ந்த முருகேசன் அடகு வைத்ததும் தெரியவந்தது.

முருகேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே அடுத்தடுத்து கொலையாளிகள் சிக்கியுள்ளனர். இதில் அயூப்கான் சில நாட்களுக்கு முன்பு நில அபகரிப்புப் புகாரில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். எந்த கட்டிடத்துக்காக அவர் நரபலி கொடுத்தாரோ அதே கட்டிடத்துக்காக சிறைக்கும் அவர் சென்று திரும்பினார். அந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் அயூப்கான் அபகரித்துக் கொண்டார் என்று புகார் கூறப்பட்டதால் அவர் சிறைக்குப் போய் திரும்பினார்

கருத்துகள் இல்லை: