திங்கள், 30 ஏப்ரல், 2012

நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி

மதுரை:""நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி செய்ததாக ஒருபோதும் கூறியது கிடையாது. எல்லாமே பொய். என்னை அழிக்க நினைத்தனர். ஆசிரமத்தை சேதப்படுத்தினர். ஆசிரமத்திற்குள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம். அதேபோல், ரஞ்சிதா வந்து செல்கிறார்,'' என மதுரையில் சாமியார் நித்யானந்தா கூறினார்.
மன்னர் கூன்பாண்டியன் வழங்கிய 1,250 ஏக்கரை அந்த ஓட்டல் நிர்வாகிக்கு குத்தகைக்கு வழங்கினேன்மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக முடிசூட்டிய பின், முதன்முறையாக நேற்று மடத்திற்கு வந்த சாமியார் நித்யானந்தா, ஆதீனத்திற்கு தங்க கிரீடம் அணிவித்தார். நித்யானந்தாவுக்கும் அணிவிக்கப்பட்டது.

பின், நித்யானந்தா கூறியதாவது:மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான நான்கு கோவில்களுக்கு இந்தாண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
24 மணி நேரமும்...:மடத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். ஆதீனத்தின் ஆன்மிகப் பணிக்காக, 1 கோடி ரூபாய் கொடுத்தேன். இன்னும் 4 கோடி ரூபாய் கொடுப்பேன்.மே 5ல், திருவண்ணாமலையில் ஆதீனத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க பாதுகை வழங்கப்படும். ஜூன் 5ல் கனகாபிஷேகம் செய்யப்படும். நானும், எனது சீடர்களும் மற்றும் அசையும், அசையா சொத்துகளும் ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்.
என்னை நியமிக்க முதலில் ஆதீனம் தான் விருப்பம் தெரிவித்தார். "என் மீது வதந்திகளை பரப்பி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அது உங்களுக்கு(ஆதீனம்) பிரச்னையை ஏற்படுத்துமே' என கேட்டேன். அதற்கு அவர், "உங்களை கண்டு உணர்ந்த பின், பீடாதிபதியாக்கா விட்டால், அது வரலாற்று பிழையாகி விடும். எது வந்தாலும் அதை எதிர்கொள்வோம்' என்றார்."சிடி' விவகாரத்தில், எல்லாமே பொய். என்னை அழிக்க நினைத்தனர். ஆசிரமத்தை சேதப்படுத்தினர். நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி செய்ததாக ஒருபோதும் கூறியது கிடையாது. ஆசிரமத்திற்குள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம். அதேபோல் ரஞ்சிதாவும் வந்து செல்கிறார்.

ரஞ்சிதா வரவில்லை: விரைவில், 100 கிராமங்களில், பள்ளி, கல்லூரிகள் கட்டுவது குறித்து ஜூன் 5ல் அறிவிப்பேன். ஆதீன மடத்தை நிர்வகிக்க 50 ஆண், பெண் சீடர்களை அனுப்பி உள்ளேன், என்றார். நேற்று, மதுரை ஆதீன மடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரஞ்சிதா வரவில்லை என நித்தியானந்தா சீடர்கள் தெரிவித்தனர்.

ஆதீன உத்தரவுப்படி...:"ஆதீனம் போன்று நீங்களும் அரசியல் ஈடுபாட்டுடன் இருப்பீர்களா? பெங்களூருவில் வசிக்கும் நீங்கள், மதுரை ஆதீன மடத்திற்கு அடிக்கடி வருவீர்களா, இல்லை இங்கேயே தங்குவீர்களா? பெங்களூருவை போன்று "ஹீலிங்' பயிற்சி மடத்தில் நடத்தப்படுமா? என நிருபர்கள் அடுத்தடுத்து கேட்டதற்கு, "ஆதீனம் என்ன உத்தரவிடுகிறாரோ, அதன்படி நடப்பேன்' என்ற நித்யானந்தா, "லண்டனில் வெளிவரும் பத்திரிகை ஒன்று, பாப்புலரான 100 பேரில் என்னையும் தேர்ந்தெடுத்துள்ளது,' என்றார்.

"நித்யானந்தா கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம்':""நித்யானந்தா கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். எனக்கு இருந்த இளைப்பு நோயை குணப்படுத்தியவர் அவர்,'' என மதுரை ஆதீனம் கூறினார்.

ஆபாச "சிடி' சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஏப்., 27ல் தற்போதைய ஆதீனம் அருணகிரி, பெங்களூருவில் முடிசூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இச்சூழலில், நேற்று நித்யானந்தாவுடன் மதுரை திரும்பிய ஆதீனம் கூறியதாவது :ஞானம், புலமை, போர்க்குணம் உடைய நித்யானந்தா கிடைத்தது, நாங்கள் செய்த புண்ணியம். எனக்கு இருந்த இளைப்பு நோயை குணப்படுத்தியவர். நோய் இருந்தால் அவரை அணுகுங்கள்.நித்யானந்தாவை தேர்ந்தெடுத்ததற்கு, இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிப்பது, அவர்களின் அறியாமை, பொறாமையைக் காட்டுகிறது. நித்யானந்தாவை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை.

யாரை நியமிக்கலாம் என எட்டு ஆண்டுகளாக தேடுதல் இருந்தது. பெங்களூருவில் நித்யானந்தாவை சந்தித்தபோது, அவரை நியமிக்கலாம் என உள்ளத்தில் உதித்தது. அங்கு அவருக்கு பக்தர்கள் அதிகம் என்பதால், அங்கேயே முடிசூட்டினேன்.ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து இப்பதவியை அவர் பெறவில்லை. அத்தொகை கொடுத்தது குருவுக்கு செய்யும் பாதகாணிக்கை. மீனாட்சி அம்மன் கோவில் 1865க்கு முன், மதுரை ஆதீன கட்டுப்பாட்டில் இருந்தது. பின், அரசிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் கோவிலை ஆதீனம் நிர்வாகத்திற்கே தரவேண்டும் என நித்யானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

எனக்கு ஓராண்டாக போலீஸ் பாதுகாப்பு இல்லை. மீண்டும் கேட்டுள்ளேன். ஆதீன மடத்தில் ஓட்டல் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை. காலி செய்ய கூறியுள்ளேன். அதேபோல், மதுரை ஜாரிபுதுக்கோட்டையில், மன்னர் கூன்பாண்டியன் வழங்கிய 1,250 ஏக்கரை அந்த ஓட்டல் நிர்வாகிக்கு குத்தகைக்கு வழங்கினேன். இரண்டையும் ஒப்படைக்காத பட்சத்தில், போலீசில் புகார் செய்வேன், என்றார்.

ஐகோர்ட் போனாலும் செல்லாது:""ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?'' என நிருபர்கள் கேட்டதற்கு, ""ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,'' என்றார் ஆதீனம்.

மதுரை ஆதீன மடத்துக்குள் இந்து அமைப்புகள் போராட்டம் :பெங்களூரில் இருந்து நேற்று மதுரை வந்த ஆதீனம், நித்யானந்தாவுக்கு தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், பக்தர்கள் நடுரோட்டில் குத்தாட்டம் ஆட, இருவரும் ஊர்வலமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். இதற்கு போலீஸ் அனுமதிக்காததால், சீடர்களுடன் கோவிலுக்கு சென்றனர்.

சந்திக்க மறுப்பு:இதற்கிடையே, "நித்யானந்தாவை தேர்ந்தெடுத்தது ஏன்?' என ஆதீனத்திடம் கேட்க, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், உட்பட பலர், மடத்துக்கு வந்தனர்.அவர்களை சந்திக்க ஆதீனம் மறுத்ததால், மடத்தினுள் திருஞான சம்பந்தர் சன்னிதி முன், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "திருஞான சம்பந்தர் வாழ்க' என, அவர்கள் கோஷமிட, பதிலுக்கு நித்யானந்தா பக்தர்கள், "நித்யானந்தாவிற்கு ஜே' என கோஷமிட, பதட்டம் உருவானது. இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.போரூர் திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி, சுரேஷ்பாபு மட்டும் மதுரை ஆதீனத்தை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

பின், அவர் கூறியதாவது:சூழ்நிலை கைதிபல்வேறு தடைகளை (நித்யானந்தா சீடர்கள்) தாண்டி, அவரை சந்தித்தேன். அவர் சூழ்நிலை கைதியாக உள்ளார்.நித்யானந்தாவை நியமித்தது குறித்து கேட்டதற்கு, "இதுகுறித்து யாரிடமும் பேச முடியாது. யாருக்கும் தகுதி கிடையாது' என்றார். எல்லா இந்து அமைப்புகளும் சேர்ந்து, மடத்தில் ஏற்பட்டுள்ள சூழலை மாற்ற வேண்டும்,'' என் றார்.பின், ஆதீனத்திற்கு எதிராக இந்து அமைப்பினர் கோஷமிட்டனர். பதிலுக்கு, நித்யானந்தா சீடர்கள் கோஷமிட்டதை தொடர்ந்து, இந்து அமைப்பினரை போலீசார் வெளியேற்றினர்.

பல வழக்குகள்:அர்ஜுன் சம்பத் கூறியதாவது :ஆதீன மடத்தில் நடந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. அடுத்த வாரிசை, முன்கூட்டியே தேர்வு செய்து, பயிற்றுவித்து, சிவதீட்சை கொடுத்த பின் தான் நியமிப்பர். ஆனால், பல வழக்குகள் உடைய, சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தாவை திடீரென தேர்ந்தெடுத்தது ஏன்? முறையாக தேர்வு நடந்ததா என, ஆதீனம் விளக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: