வியாழன், 15 செப்டம்பர், 2011

விக்கிலீக்சில் நம்புங்கள் (எம்.கே) நாராயணன் பின்னுகிறார்!!

ஹெட்லி - எம்.கே.நாராயணன்
ம்புங்கள் எம்.கே நாராயணணை மறந்திருக்க மாட்டீர்கள். பிரதமர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்த நாராயணன், கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி அன்று அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வெளியுறவுத் துறை செயலாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற சிவசங்கர் மேனன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்த பதவி மாற்றம் குறித்து இந்தியாவின் அமெரிக்க தூதரான திமோதி ரோமர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
ஹெட்லி - எம்.கே.நாராயணன்
அந்தக் கடிதத்தில், “மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என, இந்திய அரசு கேட்பதெல்லாம், சும்மா பம்மாத்து வேலை தான். உண்மையில், ஹெட்லியை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களை திசை திருப்பவே, ஹெட்லியை கொண்டுவர வேண்டும் என இந்திய அரசு கேட்கிறது. இந்தத் தகவலை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே என்னிடம் தெரிவித்தார்’ என்று, ரோமர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மேலும், ஹெட்லியை அனுப்பும்படி அமெரிக்காவை இந்திய அரசு கேட்க வேண்டாம். அப்படிக் கேட்டாலும், அமெரிக்க விதிகளின்படி அதை நிறைவேற்றுவது சாத்தியமல்ல’ என, நாராயணனிடம் தான் கூறியதாகவும் ரோமர் தெரிவித்துள்ளார். 2009-ம் ஆண்டு டிசம்பரில் இந்த விஷயங்கள் நடந்தன என்று, விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் எம்.கே.நாராயணின் பதவி மாற்றம் குறித்தும், அவர் காஷ்மீர் பிரச்சினையில் பழமைவாதமாகவும், அதிக்கம் செய்யும் தரப்பின் கருத்தை பிரதிபலிப்பதாகவும், அவருக்கும் நேரு, இந்திரா குடும்பத்திற்கும் உள்ள செல்வாக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பஞ்சாங்க அம்பி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மாற்றப்பட்டிருப்பதையும் அமெரிக்கர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதும் அதிலிருந்து தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மட்டுமல்ல நம்புங்கள் நாராயணனுக்கும் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், “”விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது. ஹெட்லியை எப்படியும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து, மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு மிகுந்த அக்கறை காட்டியது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அத்துடன், ஹெட்லியை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதிலும் மத்திய அரசு அக்கறை காட்டியது,” என்று சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் உடனான தன் பேச்சு குறித்து, அவர் கருத்து தெரிவிக்க மறுத்திருக்கிறார். அதைப் பற்றியும் கருத்து சொல்லியிருந்தால் அண்ணாத்தேவின் தேசசேவை சந்தி சிரித்திருக்கும்.
இந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள்? நாங்கள் வெளிப்படையாக இந்திய அரசை கண்டித்தால் எங்களை தேச துரோகிகள் என்று தூற்றும் ‘தேசபக்தர்கள்’ இவ்விடத்தில் அமைதி காக்கும் மர்மம் என்ன?
அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாமல் அதன் இரகசியங்களை இப்படி ஒரு வெளிநாட்டு தூதரிடம் பேசுவது என்ன செயல்? இது மட்டும் தேசத் துரோகமில்லையா? இங்கு நாராயணன் கூறியிருக்கும் கருத்துக்களின் படி இந்திய அரசு மக்களை திசை திருப்புவதற்காக ஹெட்லியைப் பற்றி பேசுகிறது என்பது உண்மைதான். பாக்குடனான பதட்டமே இவர்களது அரசியல் லாபத்திற்காகத்தான் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறோம். ஆனால் இந்த நாராயணன் இந்திய அரசைப் போல ஒரு அமெரிக்க அடிமை என்பதையும், அமெரிக்கர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுவதைப் பற்றியும் பேசியிருப்பதுதான் குறிப்பிடத் தக்கது. இருந்தும் இவரை அமெரிக்கா கை கழுவியிருப்பதற்கு காரணம், இன்னும் மோசமான அடிமை வேண்டும் என்பதுதான்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடக்கும் போது இந்த நாராயணன்தான் தே.பா.ஆலோசகர். அப்போது இவர் கொழும்பு சென்று ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல சீனெல்லாம் போட்டார்.
இந்திய அரசும் அதன் அடிநாதமாய் விளங்கும் அதிகார வர்க்கமும் மக்களை எப்படி கிள்ளுக்கீரைகளாக நினைக்கிறார்கள், எவ்வாறு அமெரிக்க அடிமைகளாக பணிபுரிகிறார்கள் என்பதற்கு இந்த நம்புங்கள் எம்.கே.நாராயணன் ஒரு சான்று.

கருத்துகள் இல்லை: