வியாழன், 31 மார்ச், 2011

யாழ். மண்ணில் பௌத்த வரலாற்று பொக்கிஷம்

மதங்களின் வரலாறுகளைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு இடங்களிலும் பலவாறான வரலாற்றுப் பொக்கிஷங்கள் காணப்படுகின்றமை சிறப்பானதாகும். இருப்பினும் குறித்தவொரு பிரதேசத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ள சமய கலாசார சின்னங்களுக்கு மத்தியில் மற்றுமொரு மதத்தை வலியுறுத்தும் அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த பொக்கிஷங்கள் காணப்படுவதென்பது அதிசயிக்கத்தக்க விடயமாகும்.

அந்தவகையில், தமிழர் தாயகமாம் யாழ். மண்ணில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க புராதன விகாரையொன்று பற்றிய கண்ணோட்டமே இது. யாழ். சுண்ணாகம், கந்தரோடை பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கந்தரோடை புராதன விகாரை. சுமார் 2,500 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த விகாரையில் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகளே விசேடமானவை.

இலங்கைக்கு வருகை தந்த புத்த பெருமான் யாழ். நாகவிகாரைக்கு செல்வதற்கு முன்னர் இந்த கந்தரோடை விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு முதன் முதலில் வந்து ஓய்வு பெற்றதாகவும், அங்கிருந்தவாறே பல்வேறு தியானங்களில் ஈடுபட்டதாகவும் கந்தரோடை விகாரையின் வரலாறு கூறும் கண்டி இராசதானிக்கு உரித்தான விகாரைகள் மற்றும் புண்ணிய பூமிகள் தொடர்பான புத்தகமான 'நாமாவலிய'வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசமரக் கிளையுடன் இலங்கை வந்த சங்கமித்தை பிக்குனியுடன் 60 பிக்குமார்கள் வருகை தந்ததுடன் அவர்கள் அனைவரும் இந்த கந்துருகொட விகாரை அமைந்துள்ள பிரதேசத்திலேயே தங்கியிருந்ததாகவும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி 60 பிக்குமார்களும் இங்கிருந்தவாறே நாடு முழுவதிலும் பல்வேறு பௌத்த போதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்க, புங்குடுதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற மேற்படி பிக்குமார்கள், அங்கு உணவுடன் வழங்கப்பட்ட காளான் கறி விஷமானதில் அவ்விடத்திலேயே உயிர் துறந்துள்ளனர். இதனையடுத்து பிக்குமார்கள் தங்கியிருந்த கந்தரோடை பிரதேசத்துக்கே அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.

பின்னர் உயிர் துறந்த பிக்குமார்கள் வகித்திருந்த பதவிகளுக்கு ஏற்ற வகையில் அவரவர் புதைக்கப்பட்ட இடங்களில் 60 தூபிகள் அவர்கள் நினைவாகக் கட்டப்பட்டதாகவும் வரலாறுகள் பரைசாற்றுகின்றன. பின்னர், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராசதானிகள் காலத்தைச் சேர்ந்த முதலாவது பரகும்பா மன்னன், மல்லவ மன்னன், லீலாவதி மற்றும் புவனேகபாகு ஆகியோரின் காலங்களில் இந்த விகாரை புதுப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், தேவநம்பியதீஸன் மன்னன் காலத்தில், தம்பகோளப்பட்டிணம் முதல் அநுராதபுரம் நகரின் வடக்கு வாயில் வரையில் கற்தூண்கள் அமைக்கப்பட்ட அலங்காரங்களில் இந்த விகாரையும் உள்ளடக்கப்பட்டு அதற்கென விசேட அலங்காரங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும் வரலாறுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் காலத்தில் மேற்படி விகாரை சேதமாக்கப்பட்டதாகவும் அதனையடுத்து விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் காடு வளர்ந்தும் தூபிகள் அனைத்தும் மண் மேடுகளால் மூடப்பட்டதால் விகாரை இருந்த இடம் கண்டுபிடிக்க முடியாதளவில் புதையுண்டுள்ளது.

இதனையடுத்து, 1917ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெய்த அடை மழை காரணமாக மேற்படி தூபிகள் தென்பட ஆரம்பிக்கவே, அப்போது யாழ். மாவட்ட நீதிவானாக இருந்த போல் ஈ. பீரிஸ் என்பவர் அவற்றைக் கண்டு அவை தொடர்பில் ஆராய்ச்சி செய்யுமாறு எழுத்துமூலமாக அகழ்வாராய்ச்சி திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

1917 முதல் 1919 வரையான இரண்டு வருடகால அகழ்வாராய்ச்சிகளின் போதே மேற்படி  தூபிகளுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த விகாரையும் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை காலங்களுக்கு உரித்தான புராதனப் பொருட்களும் புத்தர் சிலைகளும் ஓடுகள் மற்றும் நாணயங்கள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் மேற்படி 60 தூபிகளில் 56 மட்டுமே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் பெரும்பாலானவற்றின் அத்திவாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஏனைய நான்கு தூபிகள் தொடர்பில் இன்றும் ஆராய்ச்சிகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் விகாரை பூமிப் பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள், நாணயங்கள் மற்றும் ஏனைய புராதனப் பொருட்கள் அனைத்தும் யாழ். அரும்பொருட் காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கி.பி. 9ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் நான்காம் காசியப்ப மன்னனால் இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாக இப்புண்ணிய பூமியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 'அத்தானே டெம் கடிதம்' எனும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மேற்படி விகாரை கி.பி. 9ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்தது என குறிப்பிடலாம்.

1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் விகாரை அமைந்துள்ள சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பு, அகழ்வாராய்ச்சி திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் அதில் தற்போது சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே எஞ்சியுள்ளதாக விகாராதிபதி கோட்டே விஜயானந்த தேரர் தெரிவிக்கின்றார்.

வடக்கின் வரலாறு கூறும் புராதன சொத்துக்களில் ஒன்றான கந்தரோடை விகாரையையும் அதன் புனிதத் தன்மையினையும் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
நன்றி: தமிழ் மிரர்

கருத்துகள் இல்லை: